மூன்று நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு: வாரியம் உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: புதிய இணைப்பு உள்ளிட்ட மின்சார சேவைகளை விரைந்து வழங்கும் வகையில், புதிய மின் வினியோக விதிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பிப்ரவரியில் வெளியிட்டது. அதை அமல்படுத்தி மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, அந்த இடத்தில் இணைப்பு வழங்க, கூடுதல் மின் சாதனங்கள் நிறுவ அவசியமில்லாத பட்சத்தில், மூன்று நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். அதிகபட்சம், ஏழு நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.மின் இணைப்பு வழங்க, கம்பம் நிறுவ வேண்டும் எனில், 60 நாட்கள்; டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும் எனில், 90 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.இதேபோல, மின் கட்டண விகிதம் மாற்றம், குறைபாடு உடைய மீட்டர்களை மாற்றி தரும் சேவைகளுக்கான கால அவகாசங்களும் குறைக்கப்பட்டு உள்ளன. புதிய விதிகள் குறித்து பிரிவு அலுவலகங்களுக்கு தெரிவித்து, தவறாமல் பின்பற்ற அறிவுறுத்துமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, வாரியம் உத்தரவிட்டுள்ளது.