உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை:மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே துவங்க வேண்டும் என்றும், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் அதனுடன் சேர்த்து நடத்த வேண்டும் என்றும், மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:சமீப காலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பேசப்படுகிறது. தி.மு.க.,வின் கருத்தும் இதுதான்.

10 ஆண்டுக்கு ஒருமுறை

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் பணி. இது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.மக்கள் தொகை தொடர்பான புள்ளிவிபரங்கள் அனைத்தும், இக்கணக்கெடுப்பின் வழியாக சேகரிக்கப்பட்டு, மத்திய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் பிரிவு 3ன்படி, மத்திய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.ஆனால், பொது வெளியில் தெரிவிக்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால், புள்ளிவிபர சட்டத்தின் அடிப்படையில், ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தலாம் என்பதாகும். இந்த சட்டத்தின்படி, மாநில அரசுகள் சமூகப் பொருளாதார புள்ளிவிபரங்களை சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதே தவிர, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள இனங்கள் தொடர்பாக புள்ளிவிபரங்களை சேகரிக்க இயலாது.

2021ல் நடத்தவில்லை

ஏழாவது அட்டவணையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு 69வது இனமாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்பொருள் தொடர்பான வழக்கு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பொது வெளியில் சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளபடி, புள்ளிவிபரங்கள் சேகரிக்கும் சட்டத்தின் கீழ், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இயலாது. சட்டப்படியாக நிலைக்கக்கூடிய கணக்கெடுப்பு என்றால், அது மத்திய சட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் தான் நடத்தப்பட வேண்டும். எனவே தான், இப்பணியை மத்திய அரசு மேற்கொள்வது தான் முறையாக இருக்கும் என வலியுறுத்தி வருகிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு, மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை, 2021ம் ஆண்டு நடத்தாமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. முதல் ஆண்டு கொரோனா பெருந்தொற்றை காரணமாக கூறியது. கொரோனா சென்று மூன்று ஆண்டுகளுக்கு பின்னரும், அப்பணியை செய்யாமல் இருப்பது, மத்திய அரசு தன் கடமையை புறக்கணிக்கும் செயலாகும்.மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக துவங்க வேண்டும் என, பிரதமருக்கு கடந்த ஆண்டு அக்., 20ம் தேதி கடிதம் எழுதினேன். மத்திய அரசு களப்பணி செய்து கிடைக்கும் புள்ளிவிபரங்கள் அடிப்படையில், மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கும், இயற்றும் சட்டங்களுக்கும் தான், சட்ட ரீதியான பாதுகாப்பு எப்போதும் இருக்கும்.மாறாக, மாநில அரசுகள் ஒரு சர்வே என்ற பெயரில் புள்ளிவிபரங்களை சேகரிப்பது, பின்னர் அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றுவது என்றால், அது பின்னொரு நாளில் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்.

சம உரிமை, சம வாய்ப்பு

அதைத் தொடர்ந்து, அவர் முன்மொழிந்த தீர்மானம்:இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், திட்டங்களை தீட்டி சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய, ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்.எனவே, 2021ம் ஆண்டு மேற்கொண்டிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே துவங்க வேண்டும். அத்துடன் இம்முறை ஜாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என, மத்திய அரசை இந்த சட்டசபை ஒருமனதாக வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை