சென்னை : 'மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்திய பரிசோதனையில், 211 மருந்துகள் தரமற்றதாகவும், ஐந்து மருந்துகள் போலியாகவும் இருந்தன' என, மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. நாட்டில் விற்கப்படும் அனைத்து வகை மருந்து, மாத்திரைகளும், மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாடு வாரியங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த மாதம், 1,000த்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில், காய்ச்சல், சளித்தொற்று, கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 211 மருந்துகள் தரமற்றவையாகவும், ஐந்து மருந்துகள் போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டன. இந்த விபரங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு வாரியத்தின், https://cdsco.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம். மேலும், தரமற்ற மருந்து உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழகம் மெத்தனம் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட, 'கோல்ட்ரிப்' மருந்தை உட்கொண்டதால், மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்தன. இதையடுத்து, அந்த மருந்து உற்பத்தி நிறுவனத்தில், தமிழக அரசு அக்டோபரில் சோதனை நடத்தி, கோல்ட்ரிப் மருந்து தரமற்றது என்று அறிவித்தது. ஆனால், இந்த தகவலை, மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழக அரசு தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக, தரமற்ற மருந்துகளின் விபரங்களை வழங்காத மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் இடம் பெற்றுள்ளது. இது குறித்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, உரிய பதில் இல்லை.