காங்., எம்.எல்.ஏ.,வை கண்டித்து தி.மு.க போஸ்டர் இதுதான் கூட்டணி தர்மமா என காங்கிரசார் குமுறல்
தி.மு.க., ஆட்சியை விமர்சித்த காங்., - எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ்க்கு எதிராக, கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுதான் கூட்டணி தர்மமா என, பதிலுக்கு காங்கிரசார், சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர்.துாத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., பேசுகையில், 'தி.மு.க., அரசிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினாலும், செய்து தருகிறோம் என்ற பதில் மட்டுமே சொல்லப்படுகிறது. எதுவுமே செய்வதில்லை. நான் மட்டும் இல்லை; மற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களும் என்னை போலத்தான் புலம்புகின்றனர்' என்றார்.இதை கண்டித்து, ஸ்ரீவைகுண்டம் தொகுதி தி.மு.க., சார்பில், 'வன்மையாக கண்டிக்கிறோம்' என்ற தலைப்பில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 'தொகுதி பக்கமே வராமல், தொகுதி மக்களை சந்திக்காமல், தொகுதி மக்களின் அடிப்படை தேவை என்பதை பற்றி தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், போனை எடுக்காத எம்.எல்.ஏ., நீங்கள் தி.மு.க., அரசை குறை சொல்லலாமா?' என, அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், 'கூட்டணி தர்மம் இதுதானா?' என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அனைத்து மட்டத்திலும் வருத்தம்!
அண்ணாதுரை நினைவு நாளன்று, சென்னை வாலாஜா சாலையில் அமைதி ஊர்வலம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அதற்கு அனுமதி வழங்கிய போலீஸ், அக்., 2ம் தேதி காந்தி பிறந்த நாள், அமைதிப் பேரணி நடத்துவதற்கு, நாங்க கேட்ட இடம் வழியாக செல்ல அனுமதி வழங்கவில்லை. காங்கிரஸ் கட்சியினரை, ஆட்சியாளர்கள் மதிக்கவில்லை என்ற அதிருப்தி கட்சியின் அனைத்து மட்டத்திலும் உள்ளது. இப்படிப்பட்ட வெறுப்பையெல்லாம் வைத்துத்தான், எம்.எல்.ஏ., அமிர்தராஜ் பேசியிருக்கக்கூடும். பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடாதபட்சத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் இம்முறையுன் கூட்டணி சார்பில் காங்கிரஸையே போட்டியிட வைத்திருக்கலாம். அதை பிடுங்கிக் கொண்டது தி.மு.க., இதையும் தொண்டர்கள் விரும்பவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சியில் பங்கு; கூடுதல் தொகுதிகள் போன்ற கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்பதும், தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. - மயிலை அசோக்குமார், துணைத் தலைவர், தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு.