சென்னை: ''தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை,'' என, வி.சி., - எம்.பி., ரவிகுமார் தெரிவித்தார். அவரது அறிக்கை: தேசிய குற்ற ஆவண மையத்தின், 2023ம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. நாடு முழுதும், பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து காணப்பட்டாலும், தமிழகத்தின் நிலை அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில், 2021ம் ஆண்டில், 1,377 குற்றங்கள் நடந்தன. பின், 2022ல் 1,761, 2023ல் 1,971 என அதிகரித்துள்ளது. பாலியல் கொடுமை அதேநேரம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன. தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டில், 74 பட்டியலினத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 135 பட்டி யலின பெண்கள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதில், 100 பேர், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியர். பட்டியலினத்தவர்களுக்கு எதிராக கலவரம் அதிகம் நடக்கும் நான்கு மாநிலங்களில், தமிழகம் ஒன்றாக உள்ளது. அந்த ஆண்டில், தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்கு எதிராக, 66 கலவரங்கள் நடந்துள்ளன. பட்டியலினத்தவர்கள் கொடுக்கும் புகார்களை, தள்ளுபடி செய்யும் வழக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. தேசிய அளவில், பட்டியலினத்தவர்களின் வழக்குகள், 21.2 சதவீதம் நிலுவையில் இருந்தாலும், தமிழகத்தில் 37.7 சதவீதமாக உள்ளது. பட்டியலினத்தவர்களின் வழக்குகளை கையாள்வதில், நீதிமன்றங்களும் மெத்தனமாக இருப்பது, அறிக்கையில் தெரிய வருகிறது. தேசிய அளவில், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில், 31.9 சதவீதம் தண்டனை வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 12.2 சதவீதம் மட்டுமே தண்டனை கிடைக்கிறது. குற்றப்பத்திரிகை இதற்கு, வழக்கை நடத்தும் அரசு தரப்பு, இதில் கவனம் செலுத்தாததும், நீதிமன்றங்கள் போதிய அளவு அக்கறை காட்டாததும், முக்கிய காரணமாக உள்ளது. தமிழகத்தில், எஸ்.சி., - எஸ்.டி., வழக்குகளில் கைது செய்த பின், அவர்கள் விரைவாகவே விடுதலை செய்யப்பட்டு விடுகின்றனர். கடந்த 2023ல், 4,343 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். 326 பேருக்கு எதிராக மட்டுமே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பட்டியலின சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவதில், தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது. தமிழக அரசு, இப்போதாவது இந்த அவல நிலையை மாற்ற முன்வருமா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.