சென்னை: 'மனுதாரர் கோரிய தகவலை வழங்காமல், மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு நஷ்டஈடாக, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, பி.டி.ஓ., அதிகாரிக்கு, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஆவலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், 2023 ஏப்ரலில், கிருஷ்ணகிரி மாவட்டம், வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலருக்கு மனு அனுப்பினார். அதில், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 2021 ஜனவரி முதல் 2023 ஏப்ரல் வரை பணியாற்றிய, அலுவலக ஊழியர்கள் எண்ணிக்கை, அவர்கள் வகித்த பதவி, மரணம் அடைந்த ஊழியர்கள், அதற்கான பணப்பலன் பெற்ற வாரிசுதாரர்கள் உள்ளிட்ட தகவல்களை கேட்டிருந்தார். தகவல் கிடைக்காததால், மாநில தகவல் ஆணையத்தில் முறையிட்டார். இதுகுறித்த முதல் விசாரணைக்கு, மனுதாரர் ஆஜரான நிலையில், சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் ஆஜராகவில்லை. எனவே, இரண்டாம் விசாரணைக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த இரண்டாவது விசாரணைக்கும், தளி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலர் ஆஜராகவில்லை. அதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையர் தாமரைக்கண்ணன் பிறப்பித்த உத்தரவு: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மனுதாரர் கோரிய தகவல்களை, 10 நாட்களுக்குள் முறையாக வழங்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகவல் வழங்க தவறிய, பொது தகவல் அலுவலரை கண்டறிந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க, உயர் அதிகாரிக்கு ஏன் பரிந்துரைக்கக் கூடாது என்பதற்கான எழுத்துப்பூர்வமான விளக்கத்தை, வரும் 23ம் தேதிக்குள், ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மனுதாரரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு, நஷ்டஈடாக 10,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.