உலக வரலாற்றில் இயற்கையையும், அன்னையையும் தெய்வங்களாக கருதி வழிபட்டுள்ளனர். 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என நம் கலாசாரம் அன்னையருக்கு தான் முதலிடம் தந்திருக்கிறது. படைத்தவன் தான் கடவுள் எனில், நம்மை படைத்த அன்னையர் தான் கடவுள். அன்னை தான் அனைத்துக்கும் அடிப்படையானவள். அவள் இல்லையெனில், நாம் இந்த மண்ணில் அவதரித்திருக்க முடியாது.சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும் ஆசான் என எத்தனையோ பாத்திரங்களில் பெண் வலம் வந்தாலும், அன்னை என்ற பாத்திரமே உன்னதமானது. உலகில் ஈடு இணையற்றது. அனைவருக்கும், அன்னையே முதல் தெய்வம். நம்மை உலகுக்கு அடையாளம் காட்டிய அன்னையை, எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது. வயதான காலத்திலும், அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும் மே இரண்டாவது ஞாயிறு (மே 13), உலக அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று நேரிலோ அல்லது போன் மூலமோ அன்னையருக்கு வாழ்த்துக்கூறி, ஆசிர்வாதத்தை பெற மறவாதீர்.எப்படி வந்தது:
பண்டைய கிரீசில், 'ரியா' என்ற கடவுளைத் தாயாக வழிபட்டனர். ரோமிலும், 'சிபெல்லா' என்ற பெண் கடவுளை, அன்னையாக தொழுதனர். நவீன அன்னையர் தினம் என்பது அன்னா ஜார்விஸ் என்பவரால், அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவின் கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் மே மாதம் 2வது ஞாயிறு அன்னையர் தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. இதை இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70 நாடுகள் பின்பற்றுகின்றன. தாய்க்கு தலைவணங்கு:
சமுதாயத்தில் உயர்ந்த ஒவ்வொரு மனிதரும், அன்னையின் கடின உழைப்பாலும், தியாகத்தாலுமே பெருமை அடைந்துள்ளனர். அன்னையை போற்றாத எவரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு முக்கியமானது. கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவதை போல, நமக்கு எல்லாமுமாய் இருக்கும் அன்னையை போற்றி வணங்குவோம்.