உணவே மருந்து... உற்சாகமாகும் தேர்வு
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கண் மருத்துவர் சத்யா கூறியதாவது:தேர்வின் போது இரவில் அதிக நேரம் கண் விழித்து படிக்க கூடாது; அது தேர்வில் சோர்வை உருவாக்கி விடும். முதல் நாள் இரவு முழுவதும் படிக்காமல் குறைந்தது ஆறு மணி நேரமாவது நன்கு துாங்க வேண்டும். அப்போது தான் மறுநாள் உடல்நிலை தேர்வுக்கு ஏதுவாக இருக்கும்.பசிக்கேற்ப உணவுமுடிந்தவரை காரம் நிறைந்த, உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு பதார்த்தங்களை தேர்வு முடியும் வரை எடுத்துக் கொள்ளக்கூடாது. நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உண்ணலாம். தேர்வுக்கு சாப்பிடாமல் செல்வதையும், அதிகளவில் சாப்பிட்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். பசிக்கு ஏற்ப உணவு அருந்தினால் தான், சுறுசுறுப்பாக இருக்க முடியும். இயன்றவரை கண்களுக்கு ஓய்வு தந்து விட்டு, மீண்டும் படிக்கலாம்.ஒப்பிடாதீர்கள்தேர்வு காலங்களில் மகன், மகளை பிற மாணவ, மாணவியருடன் பெற்றோர் ஒப்பிடக்கூடாது. இன்று தேர்வு எழுதினாயா, எளிமையாக இருந்ததா, நாளைய தேர்வுக்கு தயாராகி விட்டாயா, தைரியமாக நன்கு படித்து தேர்வெழுது என ஊக்கப்படுத்த வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் தேர்வு காலத்தில், 'டிவி', மொபைல் போன் போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்து தேர்வுக்கு தயாராகிறவர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்கித்தர வேண்டும். இரவு, அதிகாலையில் அவர்களுடன் இருக்க வேண்டும். நல்ல எண்ணங்களை மாணவர் மனதில் பெற்றோர் விதைக்க வேண்டும்.