கர்ப்பிணிகளின் மிகப் பெரிய கவலையே, 'கொரோனா தொற்று ஏற்பட்டால், அது, கருவில் இருக்கும் குழந்தையை பாதித்து விடுமோ' என்பது தான்.கர்ப்பத்தின் ஆரம்பத்தில் இருப்பவர்களுக்கு, குழந்தை ஆரோக்கியமாக உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, இயல்பாகவே இருக்கும்.சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட, 'ஜிகா' வைரஸ் தொற்று உட்பட, சில வகையான வைரஸ் தொற்றுகள், கர்ப்பிணிக்கு ஏற்பட்டால், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.ஆனால், தற்போது பரவும் கொரோனா, குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கலாம் என்பதற்கு, எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது.கடந்த ஆண்டு, சீனாவில், வூஹான் நகரில் வைரஸ் தொற்று ஏற்பட்ட கர்ப்பிணிகளில், 50 பேரிடம் தொடர்ந்து செய்த மருத்துவ ஆய்வில், கர்ப்பிணியின் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; குறைபாடுடனும் குழந்தை பிறக்கவில்லை. தாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், கருவில் இருக்கும் குழந்தை, பாதுகாப்பாகவே இருந்தது.
பின் ஏன் கர்ப்பிணி பாதுகாப்பாக இருக்க வேண்டும்?
பொதுவாகவே, கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு அணுக்கள் குறைவாக இருக்கும். இதனால், தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதிலும் கூட, கொரோனா வைரஸ் பாதிப்பு, கர்ப்பிணிகளை தாக்கும் அபாயம் அதிகம் என்று உறுதி செய்யப்படவில்லை. 'ஜிகா' வைரஸ் பாதிப்பின் போது, ஆப்பிரிக்காவில் பச்சிளம் குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டனர்; ஆனால், கொரோனா வைரஸ் பாதித்த பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு, வைரஸ் பாதிப்பு இருந்ததாக, இதுவரையிலும் செய்தி இல்லை.
தாய்ப்பால்
தாய்ப்பாலில் எந்த வைரஸ் கிருமியும் இருக்காது. எனவே, பாதுகாப்பாக, தாய்ப்பாலை, 'பம்ப்' உதவியுடன் தனியே சேகரித்து, குழந்தைக்கு கொடுக்கலாம். வைரஸ் பாதித்த பெண், தனிமையில் இருக்கும் நான்கு வாரங்களுக்கு, குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீரியமாக இருக்கும் வைரஸ், குழந்தையை பாதிக்காமல் இருக்கும்.ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும் போது கை, மார்பகங்கள் சுத்தம் செய்ய வேண்டும்; முக கவசம் அணிய வேண்டும்; இதுதவிர, இருமல், சளி இருந்தால், அது குழந்தையை பாதிக்கும். எனவே, தாய்ப்பாலை தனியாக சேகரித்து தருவதே பாதுகாப்பு.
வடிகட்டி!
பிளசென்ட்டா எனப்படும், தாய் - சேய் இணைப்பு திசு, இயற்கை, குழந்தைக்கு கொடுத்த வடிகட்டி. இதன் வழியாக தாய் சாப்பிடும் அனைத்தும் குழந்தைக்கு செல்லாது; எது தேவையோ அதை மட்டும் வடிகட்டி குழந்தைக்கு தரும்.
குழந்தையும் வைரசும்!
இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கவே இருக்காது என்று சொல்வதை விட, பாதிப்பு ஏற்படுவது அபூர்வம் என்று சொல்லலாம்.வைரஸ் வெளியில் இருக்கும் போது, உயிரற்ற ஒரு துகள் போல் தான் இருக்கும். நம் உடம்பினுள் சென்று, செல்களுக்கு உள்ளே ஒட்டிக் கொண்ட பின், செல்களில் இருக்கும் புரதத்தை எடுத்து, வளர ஆரம்பிக்கும். செல்களை போன்றே இருப்பதால், நோய் எதிர்ப்பு அணுக்களால் இவற்றை அடையாளம் கண்டு அழிக்க முடிவதில்லை.வைரஸ் கிருமி, பொதுவாக ஒட்டி வளரும் இடங்கள், சுவாச பாதையும், ஜீரண மண்டலமும் தான். இதில், வைரஸ் ஒட்டிக் கொள்ள உதவி செய்யும் செல்களுக்கு, 'ரிசெப்டார்கள்' அதாவது ஏற்பிகள் என்று பெயர்.இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இவை மிகவும் குறைவு என்பதால், வைரஸ் பாதிக்கும் வாய்ப்பு குறைவு. 'குழந்தைகளை அதிகம் பாதிப்பதில்லை; பிறகு ஏன் பள்ளிகளை மூட வேண்டும்?' என்று கேட்பவர்கள் இருக்கின்றனர்.வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்றாலும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு அதிகம். பிறப்புறுப்பில், வைரஸ் கிருமி பொதுவாக இருக்காது. வைரஸ் பாதித்த பெண், சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.
பிளாஸ்டிக்!
பழைய காலத்தில் பயன்படுத்திய தாமிர பாத்திரத்தில், மூன்று மணி நேரம் வரை, வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும். மர பொருட்களிலும், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களிலும், இதைக் காட்டிலும் அதிக நேரம் வைரஸ் உயிர்ப்புடன் தங்கும். பிளாஸ்டிக்கில் நீண்ட நேரம் அப்படியே ஒட்டியபடி இருக்கும்.
தனிமைப்படுதல்!
நகராமல், எந்த இடத்தில் இருக்கிறதோ, அதே இடத்தில் இருப்பது வைரஸ். அதுவாக நம் மீது ஒட்டுவதில்லை; நாம் தான் அதை தொடுகிறோம். அந்த வாய்ப்பை குறைப்பது அல்லது செய்யாமலேயே இருப்பது ஒன்று தான், வைரசிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி.உள்ளே புரதம் வெளியில் கொழுப்பு என்று இரண்டு அடுக்குகளாக இருப்பது வைரஸ். கொழுப்பு அடுக்கை உடைத்து விட்டால் அழிந்து விடும். இதற்கு, வீரியம் மிக்க திரவங்கள் தேவை இல்லை; தினசரி உபயோகிக்கும் சோப்பு போட்டு கழுவினாலே போதும்.யாருடனும் நெருங்காமல், இடைவெளியை கடைப்பிடித்து, சுவாச மண்டலம், தோல் இரண்டையும் பாதுகாத்தால், வைரசை வாங்கிக் கொள்ள மாட்டோம்.வெளியில் சென்றால், முக கவசம் அணிய வேண்டும். தும்மும் போதும், இருமும் போதும் நீர் துளிகள் வெளியே தெறித்து, வெட்ட வெளியில் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை அப்படியே இருக்கும். அந்த இடத்திற்கு, பாதுகாப்பு இல்லாமல் சென்றால், தொற்றிக் கொள்ளும்.
'டெலி கன்சல்டன்சி!'
நேரில் பார்த்து தான், மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பவர்களை மட்டும், உரிய பாதுகாப்புடன் வர சொல்கிறோம்; மற்றவர்கள் தொலைபேசி வாயிலாக ஆலோசனை பெறலாம்.
டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன்,மகப்பேறு மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர்,கோவை.9731333473, 9443793931