சிறுநீரக கோளாறு... தீர்வு தரும் நுண்துளை சிகிச்சை!
ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு, சிறுநீர் தொடர்பான பிரச்னைகள், பொதுவான ஒன்றாக உள்ளது. இரவு நேரத்தில் அடிக்கடி பாத்ரூம் செல்வது, எத்தனை முறை சிறுநீர் கழித்தாலும் முழுமையாக கழித்த உணர்வு இல்லாதது போன்றவை, சிறுநீரக கோளாறுக்கான சில அறிகுறிகள். இது போன்ற அறிகுறிகள், 'புரோஸ்டேட்' சுரப்பி வீக்கத்தினால் வருகிறது. மருத்துவ ஆலோசனைக்கு சென்றால், அல்ட்ரா சவுண்டு, ரத்தப் பரிசோதனை, புரோஸ்டேட் சுரப்பியில் எந்த அளவு வீக்கம் உள்ளது, சிறுநீர் தங்குகிறதா, கேன்சர் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய பரிசோதனை செய்ய வேண்டும். சிறுநீர் பிரச்னை உள்ள 100 பேரில், 80 பேருக்கு மாத்திரைகள் வாயிலாகவே பிரச்னையை சரி செய்ய முடியும். இரவில் ஒரு வேளை மாத்திரை சாப்பிட்டால் போதும். இரண்டு, மூன்று வாரத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். மாத்திரை சாப்பிட்டும் பிரச்னை சரியாகாமல் இருப்போருக்கு தான், அறுவை சிகிச்சை தேவைப்படும். அறுவை சிகிச்சை தேவைப்பட்டாலும், நுண்துளை அறுவை சிகிச்சையில் எளிதாக சரி செய்து விடலாம். சிறுநீர் வெளியேறும் பாதை வழியே நுண்ணிய குழாயைச் செலுத்தி, புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள வீக்கத்தை சரி செய்தாலே, முழுமையான தீர்வு கிடைத்து விடும். 'டே கேர்' என்ற முறையில், காலையில் வந்து, மாலையில் வீட்டிற்கு சென்று விடலாம். அத்தனை சுலபமான சிகிச்சை இது. இரண்டொரு நாட்கள் சிறுநீர் வெளியேற குழாய் பொருத்த வேண்டியிருக்கும். மற்றபடி எந்த சிக்கலும் இருக்காது. இது தெரியாமல் நிறைய பேர், புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்கு சிகிச்சை எடுக்காமல் சிரமப்படுகின்றனர். டாக்டர் என். ராகவன், சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை 9840014421drnarasimman_ragavan@appollohospitals.com