உள்ளூர் செய்திகள்

சில சந்தேகங்கள்....சில பதில்கள் !

மதுரா, கவுண்டம்பாளையம்: என் தாய்க்கு 49 வயதாகிறது. ஒரு ஆண்டாக, மாத விடாய் ஏற்படவில்லை. அவருடைய வயிறு மிகப் பெரிதாக உள்ளது. டாக்டரிடம் காண்பித்த போது, அவருக்கு 'கொழுப்பு நிறைந்த தொப்பை' இருப்பதாகக் கூறினார். அவர் கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன செய்யலாம்?டாக்டர் சொல்வது சரியாக இருக்கலாம். 'மெனோபாஸ்' காலம் முடிந்ததும், பெண்களுக்கு உடல் பருமன் ஏற்பட்டு விடுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் கூட, இன்னும் அதிகமாக உடற்பயிற்சி செய்து, உணவைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். எனினும், வயிறு பெருத்துப் போனதற்கு என்ன காரணம் என்பதை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் எடுத்துப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.கம்பியாண்டான், மதுராந்தகம்: என் மூத்த பெண்ணுக்கு, 'சீசோப்ரீனியா' பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கென மருந்து உட்கொள்கிறாள். எனினும், பிளஸ் ஒன் படிப்பைத் தொடர முடியவில்லை. இவளுக்கு அடுத்தவளாக இன்னொரு பெண்ணும் எனக்கு உண்டு. என் மூத்த மகளுக்கு, திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால், அவளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், கருத்து கூற மறுக்கிறார். என் பாட்டி மற்றும் வீட்டில் உள்ள மூத்தவர்கள், என் மகளுக்கு திருமணம் நடந்தால், சரியாகி விடுவாள் எனக் கூறுகின்றனர். இவளால், என் இளைய மகளின் திருமணமும் தடைபடுகிறது. எனவே, மூத்த மகளுக்கு திருமணம் செய்யலாமா? திருமணம் ஆகவில்லை எனில், அவளை யார் கவனித்துக் கொள்வது?'சீசோப்ரீனியா' என்பது நாள்பட்ட நோய்; திருமணம் ஆகிவிட்டால், தானாக தீராது. மருந்தை நிறுத்தினால், மீண்டும் அறிகுறிகள் தென்படும். அவரை நீங்களே கவனிக்க மறுக்கும்போது, அவளுடைய கணவர் என்று ஒருவர் வந்தால், அவர் எப்படி அவளுடைய நோயை பொறுத்துக் கொள்வார், கவனிப்பார்? கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு உங்கள் மகள் சென்றால், அவளை மீண்டும் பிறந்த வீட்டுக்கே அனுப்பி வைக்கும் நிலையும் ஏற்படலாம். உங்கள் இளைய மகளை நன்றாகப் படிக்குமாறு அறிவுறுத்துங்கள்; வேலைக்குப் போகச் சொல்லுங்கள். உங்கள் மகளுக்குத் திருமணம் முடித்து, புகுந்த வீட்டுக்கு அனுப்பினால், பிரச்னை தீர்ந்து விடும் எனக் கருத வேண்டாம். அவளுக்கு தன்னம்பிக்கையும், தன்னிறைவும் ஏற்பட வேண்டும். உங்களுக்கு ஒரு மகன் இருந்து, அவனுக்கு இது போன்ற குறைபாடு உடைய பெண்ணை திருமணம் செய்ய நீங்கள் முனைவீர்களா?சோமசேகர், மதுரை: என் வயிற்றிலிருந்து வாயு வெளியேறிய வண்ணம் உள்ளது. எப்போதும் சத்தமாக வெளியேறுவதால், எனக்கு சங்கடம் ஏற்படுகிறது. என்ன செய்யலாம்?உங்கள் உணவு முறையில் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டால், பிரச்னையிலிருந்து வெளிவரலாம். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் சாப்பிடுவதைத் தவிருங்கள்; பருப்பு வகைகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்