குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியம் வந்துவிட்டது!
கடந்த முறை வந்த வைரஸ் தொற்றை விட, இரண்டு முறை மரபியல் மாற்றம் ஆகி, அதிக வீரியத்துடன் இந்த முறை வைரஸ் வந்துள்ளது. அதிவிரைவாக பரவுகிறது; குழந்தைகளையும் பாதிக்கிறது. வைரஸ் தொற்று ஆரம்பித்த கடந்த ஓராண்டில், வழக்கமாக போட வேண்டிய தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடவில்லை. குறிப்பிட்ட வயது வரை, பல்வேறு தொற்றுகள் குழந்தைகளை தாக்கி, அதற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி வந்து விடும். கடந்த பல மாதங்களாக வீட்டில் இருந்தே, 'ஆன்லைன்' வகுப்புகள், சாப்பாடு, துாக்கம் என்று இருந்து, ஓடியாடி விளையாடுவதை மறந்து விட்டனர். இதனால், குழந்தைகளின் எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்கலாம். அதனால், இரண்டாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். முதல் அலையின் போது, வெளியில் போய்விட்டு வந்தால், கவனமாக கிருமி நாசினி பயன்படுத்தி, தங்களை சுத்தம் செய்த நிலை இப்போது இல்லை. வீட்டில் இருக்கும் வயதானவர்கள், குழந்தைகளுக்கு கொடுத்த பாதுகாப்பை இப்போது தருவதில்லை; அலட்சியமாக இருப்பதாகவே தோன்றுகிறது. கை கழுவி, வாய் கொப்பளித்து, வீட்டுக்குள் வருவதில்லை. கடந்த முறை அறிகுறிகள் இல்லாமல் வைரஸ் தொற்று ஏற்பட்டு, தானாகவே தொற்று சரியான பல குழந்தைகளுக்கு, அதன்பின் பாதிப்புகள் வந்தன. தற்போது காய்ச்சல் தவிர, செரிமான பிரச்னைகள், மூச்சு திணறல் என்று பெரியவர்களிடம் தென்படும் அறிகுறிகளுடன் வருகின்றனர். வெளியில் போய் விட்டு வீட்டிற்குள் நுழையும் முன், வயதானவர்கள், குழந்தைகள் இருப்பதை மனதில் கொண்டு, பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.டாக்டர் பி.கண்ணன் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மதுரை.0452 - 4263000, 4263699