உள்ளூர் செய்திகள்

பருப்பு சாதமும், தயிர் சாதமும் எடுபடாமல் போனது ஏன்?

அவரவரின் வயது, உடல் எடை, உடல் கோளாறுகள், செரிமான சக்தி, உடல் உழைப்பு, குடும்ப உணவுப்பழக்கம், எத்தனை வேளை சாப்பிடு கின்றனர் ஆகியவற்றின் அடிப்படையில் தான், எந்த மாதிரியான உணவு, எவ்வளவு உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால், உணவு சேவைக்கான செயலிகள், வீட்டிற்கே வந்து உணவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், என்ன மாதிரியான உணவுகளுக்கு சலுகை, எவற்றை நாம் ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை, அவ்வப்போது நம் கண்முன்னே கொண்டு வந்து, அந்த உணவை ஆர்டர் செய்யும் ஆர்வத்தைத் துாண்டும் சக்தியாக மாறியிருக்கின்றன. புதன்கிழமைகளில், ஒரு குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனம், கோழி இறைச்சி உணவுகளுக்கு வழங்கும் இலவச சலுகை நம் மனதிற்குள் பதிந்திருக்கிறது. வெளியிலிருந்து வரும் காரணிகளுக்கு நாம் அடிமையாவது ஏன்? எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்வது மற்றும் எதையும் தீர யோசிப்பதற்கான நேரமின்மையால், உழன்று கொண்டிருக்கிறோம். நம் ஓய்வு நேரத்தை, பயண நேரத்தை முழுமையாக ஆக்கிரமித்திருக்கும, போனும், கம்ப்யூட்டரும், 'டிவ'யும் நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. நாம் உண்ணும் உணவை நாம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். காரணம், நம் தட்டில் உள்ள உணவு ஆரோக்கியமான சரிவிகித உணவாக இருந்தால், டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது; மருந்து செலவு இல்லை; 'செக் அப்'களுக்கு செல்ல வேண்டாம். குழந்தைகள் என்ன சாப்பிடுகின்றனர் என்பதில், அக்கறை இல்லாமல் இருப்பதால் தான், அந்த இடைவெளியை, துரித உணவுகளும், அதிக உப்பு, சர்க்கரை, சோடியம் நிறைந்த தின்பண்டங்களும் நிரப்புகின்றன. சுவையை கூட்டும் அஜினோ மோட்டா போன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்பட்ட 'மொறுமொற' உணவுகளின் முன், பருப்பு சாதமும், தயிர்சாதமும் எடுபடாமல் போகின்றன. குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் தொடர்கள், செல்லும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் என எல்லா இடங் களிலும் பரவி நிற்கும், பீட்சா, பர்கர், கோக் போன்ற பண்டங்கள் குழந்தைகளை எளிதாக கவர்கின்றன. குளிர்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்றவை மலிவு விலையில் குக்கிராமங்களில் உள்ள சிறிய கடைகளில் கூட கிடைக்கும் அளவிற்கு அந்த உணவுப் பொருட் களின் உற்பத்தித் திறனும், வணிக சேவையும் அதிகரித்து, நமக்கு ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி விட்டன. ஒரு வீட்டில், நீரிழிவு நோய் உள்ள தந்தை இருப்பார்; மூட்டு வலி உள்ள தாய் இருப்பார். கல்லுாரி, பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், முதியவர் என்று ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவரவர் வயது, உடல் உழைப்பு தேவைகளுக்கேற்ற உணவுகளை சாப்பிட வேண்டுமே தவிர, சமூக வலைதளங்களில் யாரோ சொல்லும் உணவை, ஆராயாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. உண்ணும் அளவான சரிவிகித உணவு, உடற் பயிற்சி, நல்ல உறக்கம், இறுக்கமற்ற சீரான மனநிலை என, நாம் செய்யும் வாழ்வியல் மாற்றங்கள் மட்டுமே ஆரோக்கியத்தைத் தரும். பெ.உமாமகேஸ்வரி, உதவி பேராசிரியர்,மருத்துவம் சார் ஊட்டச் சத்தியல் துறை. எஸ்டிஎன்பி வைணவக் கல்லுாரி, சென்னை 94434 60886umamaheswari.p@sfnbvc.edu.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்