UPDATED : ஜன 03, 2024 06:57 PM | ADDED : ஜன 03, 2024 06:48 PM
கடந்த 02/01/2024 ஆம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 38 வது பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு தலைமைதாங்கி மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதற்காக பிரதமர் மோடி மேடைக்கு வந்தார்.மேடையை ஒட்டி டாகடர் பட்டம் பெறுபவர்கள் அமரவைக்கப்பட்டு இருந்தனர்.மேடையின் படிக்கட்டுகளில் ஏறப்போன பிரதமர், டாக்டர் பட்டம் பெற அமர்ந்திருந்தவர்களின் வரிசையில் முதலாவதாக ஒரு துறவி அமர்ந்திருப்பதைப் பார்த்தவாறு தனது இருக்கைக்கு சென்றார்இந்தத்துறவி ஒரு வேளை இடம் மாறி உட்கார்ந்திருப்பாரோ? என்று பார்வையாளர்கள் பலருக்கும் ஐயம் இருந்தது.இந்த ஐயம் அடுத்த சில நிமிடங்களில் நீங்கியது.மயிலாடுதுறை தருமபுர ஆதீன சீடரான திருஞானசம்பந்த தம்பிரான் அவர்கள் 'சிவபோக சாரம் காட்டும் குருவருள் அனுபவம்' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.இப்போது அவருக்கு பிரதமர் மோடி,முனைவர் ( டாக்டர் பட்டம்) வழங்கி கவுரவிப்பார் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அந்த துறவியானவர் அமைதியாக படிகளில் ஏறிச்சென்று தனக்கான முனைவர் பட்டத்தை பெற்றார்.பின்னர் அவரிடம் பேசியபோது பல சுவராசியமான தகவல்கள் கிடைத்தது.
திருச்சியில் பிறந்து வளர்ந்த நான் அங்குள்ள உருமு தனலட்சுமி கல்லுாரியில் பி.காம் இளங்கலை படித்தேன் அதற்கு பிறகு ஆன்மீகத்தில் கொண்ட நாட்டம் காரணமாக தருமபுர ஆதீனத்தில் சேர்ந்தேன் தற்போது கட்டளை தம்பிரானாக இருந்து ஆதினத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். நாட்டில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை பேரிடர்களின்போது ஆதினத்தின் சார்பில் மக்களுக்கு உதவி செய்தோம், சமீபத்தில் நெல்லையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போதும் எங்கள் சேவை பெரிய அளவில் இருந்தது.ஆதீனத்தின் 25 மற்றும் 26 வது சன்னிதானமாக இருந்தவர்கள் மடத்தில் இருப்பவர்கள் தங்களது கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறி அதற்கான உதவிகளை செய்தனர்,இதன் காரணமாக நான் மயிலாடுதுறை ஆதின கலைக்கல்லுாரியில் எம்.ஏ., எம்.பி., பி.எச்டி., படித்தேன். அந்த கல்லூரியிலேயே கவுரவ விரிவுரையாளராக பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போதுள்ள 27 வது சன்னிதானம், என்னை கல்விக்குழு உறுப்பினராக நியமித்துள்ளார்.டாக்டர் பட்டம் பெற்றதால் கல்லூரிக்கும், மடத்துக்கும், எனக்கும் பெருமை. தருமபுரம் ஆதீனத்தில் ஆன்மிகப்பணி மட்டுமின்றி மக்கள் பணியும் சிறப்பாக செய்யப்படுகிறது. முனைவர் பட்டம் பெறுவதில் தமிழகம் தான் முதன்மை மாநிலமாக இருப்பதாக முதல்வர் குறிப்பிட்டார். கல்வி அவசியம். அனைவரும் படிக்க வேண்டும். படிப்புக்கு எல்லை என்பது இல்லை. செல்வம் கொடுக்கக்கொடுக்க தேயும். கல்வி ஒன்று தான் கொடுக்கக்கொடுக்க வளரும். என்றும் கூறினார்.-எல்.முருகராஜ்