உள்ளூர் செய்திகள்

கிராமங்களுக்கு ஒளியூட்டும் பேராசிரியை

நம் நாட்டில் இன்னமும் பல லட்சக்கணக்கான கிராம மக்கள் மின்சாரமின்றி வாழ்கின்றனர். இந்நிலையை மாற்ற அரசுதான் முயற்சி எடுக்க வேண்டும் என்று காத்திருக்காமல் செயலில் இறங்கி சாதித்துள்ளார் மும்பையைச் சேர்ந்த முன்னாள் கல்லூரிப் பேராசிரியை பிரதிபா பாய்.மும்பையின் ஹெச்.ஆர்.வணிகம் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றியவர் பிரதிபா. 2010ஆம் ஆண்டில் தனது மாணவர்களுடன் இணைந்து சூரிய ஒளி ஆற்றலின் மூலம் இயங்கும் விளக்குகளை கிராமத்தினருக்குத் தரும் திட்டத்தை முன்னெடுத்தார். பிரதிபாவின் திட்டம், கிராம மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தீவிரமாகப் பணியாற்றும் தேவையை உணர்ந்த பிரதிபா, அடுத்த ஆண்டே, தனது கல்லூரிப் பேராசிரியர் வேலையைத் துறந்தார். பின்னர் முழுநேரச் சேவையில் இறங்கிய பிரதிபா, உருவாக்கிய அமைப்பின் பெயர் சிரக் (Chirag Rural Development Foundation - CRDF). தங்களது திட்டப் பணிகளுக்கான நிதிக்கு தனியார் நிறுவனங்களைச் சார்ந்துள்ளனர். மலிவான விலையில் சூரிய ஒளி விளக்குகளை கிராமங்களில் விற்பனை செய்யும் சிரக் அமைப்பு, ஏழை மக்களுக்கு விலையின்றி விளக்குகளை வழங்குகின்றது. கிராமங்களில் சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பிரசார நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது, ஏற்கெனவே அமைக்கப்பட்ட சூரிய ஒளி பேனல்களை சுத்தப்படுத்தி, பேட்டரிகளை மாற்றுவது போன்ற பராமரிப்புப் பணிகள் என சிரக் அமைப்பின் வேலைகள் பிரமிப்பூட்டுகின்றன.மஹாராஷ்டிரத்தில் தொடங்கிய சிரக்கின் பணி, தற்போது மேகாலயா, அசாம், உத்திராஞ்சல், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் விரிவடைந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !