உள்ளூர் செய்திகள்

குதிரும் பத்தாயமும்

'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழஞ்சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், குதிர் என்றால் என்னவென்று யோசித்திருக்கிறீர்களா? குதிர், பத்தாயம் என்பவை, அந்தக் காலத்தில் தானியங்களைச் சேமித்து வைக்கும் கொள்கலன்கள். தானியங்களை, பூச்சி, வண்டு, ஈரத்தில் இருந்து பாதுகாக்க, குதிர் மற்றும் பத்தாயங்களில் அக்கால மக்கள் சேமித்து வைத்தனர். விவசாயக் குடும்பங்களில் பெரும்பாலும் இவை இருக்கும். மாவட்டங்களைப் பொறுத்தும், வடிவங்களைப் பொறுத்தும் இவற்றின் பெயர்கள் மாறுபடும்.ஓர் ஆளைவிட மிக உயரமான பானைகளில் (குதிர்கள்) தானியங்கள் சேமிக்கப்படும். மேலே மூடி போடப்பட்டிருக்கும். குதிரின் கீழ்ப்பகுதியில், தேவைப்படும் தானியத்தை மட்டும் எடுக்கச் சிறிய துவாரம் இருக்கும். அந்தத் துவாரத்தை அடைப்பதற்கான தாழும் இருக்கும்.பத்தாயங்கள், மரப்பலகைகளால் செய்யப்பட்டிருக்கும். ஒரு பெட்டி, மற்றொரு பெட்டியுடன் இணைக்கும் வகையில் இருக்கும். பல பெட்டிகள் இணைந்ததுதான் பத்தாயம். ஒரு பெட்டி நிறைந்ததும், அதன்மேல் மற்றொரு பெட்டியைப் பொருத்தி, அதில் தானியங்களை நிரப்புவர். அதைப்போலவே, தானியம் குறையும்போதும், காலியான பெட்டியை மட்டும் அப்புறப்படுத்த முடியும். தானியங்களை எடுப்பதற்காக, கீழ்ப்பகுதியில் சிறிய கதவுடன் கூடிய துவாரம் இருக்கும்.தானியங்களைப் பத்தாயம், குதிருக்குள் கொட்டுவதற்காக ஏணியைப் பயன்படுத்துவர்.தானிய சேமிப்பு முறைகள் மாறிவிட்டதாலும், கடைகள், தானியக் கிடங்குகள், சாக்குப் பைகள் போன்றவை வந்துவிட்டதாலும், இவற்றின் பயன்பாடு குறைந்து விட்டது. வீட்டின் ஒரு பகுதியை குதிர்களும், பத்தாயங்களும் ஆக்கிரமிப்பதால், அவற்றை பெரும்பாலும் இப்போது பயன்படுத்துவதில்லை. மிகச் சில வீடுகளில் மட்டுமே, பழமையின் அடையாளமாக இவை பாதுகாக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !