உள்ளூர் செய்திகள்

பொட்டிபுரத்துக்கு நியூட்ரினோ அதிர்ஷ்டம்!

தமிழகத்தில் நியூட்ரினோ துகள் ஆய்வகம் வரப்போகிறது என்பது மிக முக்கியமான அறிவியல் முன்னேற்றம். அதுவும் தேனி மாவட்டம், பொட்டிபுரம் அருகில் உள்ள மலையே இந்த ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மலை ஏன் தேர்வு செய்யப்பட்டது, இதன் முக்கியத்துவம் என்ன என்று, மத்திய அரசு விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்:“சார்னோகைட் (Charnockite rock) பாறையால் ஆன மலை இது. நியூட்ரினோ துகள்களை ஆராய்வதற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் இந்த மலை பெற்றிருக்கிறது. அதனால், இங்கே, வளிமண்டல நியூட்ரினோக்களை ஆராய இந்திய நியூட்ரினோ நோக்குக்கூடம் (Indian Neutrino Observatory) அமையப் போகிறது.இந்த மலை, ஏறத்தாழ ஒன்றரை கி.மீ. உயரம் கொண்ட மிகக் கடினமான பாறை மலை. சுற்றிலும் சுமார் ஒரு கி.மீ. பாறை அடர்த்தி கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் இருக்கும் நியூட்ரினோக்கள் பிற துகள்களுடன் சேர்ந்து, பொட்டிபுரம் மலை மீது எல்லா கோணங்களில் இருந்தும் விழும். அடர்த்தியான பாறைகள் மற்ற துகள்களை ஊடுருவாமல் தடுத்துவிட, நியூட்ரினோக்கள் மட்டும் மலையைத் துளைத்து உள்ளே செல்லும். மலைக்குக் கீழே சுரங்கப்பாதையில், நோக்குக்கூடம் அமைத்து, அதன் கருவிகளில் நியூட்ரினோக்களை மட்டும் விழச் செய்தால், அவற்றின் பண்புகளை ஆராய முடியும். பூமியின் அடிப்பகுதியைச் சுற்றியிருக்கும் வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோக்களும், பூமியின் கீழ்ப்பகுதியை ஊடுருவி நோக்குகூடத்தின் கருவிகளில் வந்து விழும். அவற்றையும் ஆராயலாம்.1960 களில் இருந்து நியூட்ரினோ நோக்குக்கூடங்கள், குகை அமைப்புகளில்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உலகப்புகழ் பெற்ற CERN ஆய்வுக்கூடத்தின் துகள் முடுக்கி ஆய்வுகள் (Particle accelerator researches), பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து நாடுகளின் எல்லைகளுக்கு அருகே 26 கி.மீ. சுற்றளவும், அதிகபட்சமாக 1 கி.மீ. ஆழமும் கொண்ட சுரங்கங்களில்தான் நடைபெறுகின்றன. நியூட்ரினோ நோக்குக்கூடத்துக்காக பொட்டிபுரம் மலையில் ஏற்படுத்தப்பட இருக்கும், 8 மீட்டர் குகை அமைப்பும், 2 கி.மீ. சுரங்க அமைப்பும், சாதாரணமாக, மலைத்தொடர்களுக்குள் ரயில் பாதைகளை அமைப்பதற்காக ஏற்படுத்தப்படும் சுரங்கம், குகை அமைப்பைப் போன்றவையே. பொட்டிபுரம் மலையின் குகை ஆய்வகத்தில், 50,000 டன் இரும்பால் ஆன நியூட்ரினோ நோக்குக்கருவிகளை நிறுவினாலும், அந்த மலையின் உறுதி குலையாது.மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தனிமலையாக பொட்டிபுரம் மலை இருப்பதால், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரைத் தவிர்த்து நோக்குக்கூடத்தை அமைக்க முடியும். புவியின் காந்த நடுக்கோட்டுக்கு (Geomagnetic equator) அருகில் பொட்டிபுரம் மலை அமைந்துள்ளது. அதனால், புவி காந்தப் புலத்தின் குறுக்கீடு இன்றி நியூட்ரினோக்களை இங்கு ஆராய முடியும். [புவி காந்த நடுக்கோடும், நிலநடுக்கோடும் (Equator) ஒன்றல்ல. நிலநடுக்கோட்டுக்கு ஏறத்தாழ இணையாக, ஆங்காங்கே அலை போல புவி காந்த நடுக்கோடு செல்லும். புவி காந்த நிலநடுக்கோட்டில், காந்தப்புலம் பூமியின் பரப்புக்கு இணையாக இருக்கும்.] அடிப்படைத் துகள் ஆராய்ச்சியில் இந்தியாவின் நியூட்ரினோ நோக்குக்கூடம் மிக முக்கிய பங்கு வகிக்கும். மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள், இந்த ஆய்வுக்கூடத்தை நிறுவும் நிலையிலேயே பங்காற்றி வருகிறார்கள். ஐந்தாண்டுகள் கழித்து முழுவீச்சில் இந்த நோக்குக்கூடம் செயற்படும்போது, அது தமிழகத்தின் ஆராய்ச்சிக் கல்வித் தரத்தையும் உயர்த்தும் என எதிர்பார்க்கலாம்.” என்று முடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !