குரங்குக்கு என்ன வேணும்?
சுற்றுலாப் பயணிகளை பரிசலில் ஏற்றி, சுற்றிக் காட்டும் பரிசல் ஓட்டி அவர்.அது ஒரு மலைப் பகுதி. குரங்குகளின் நடமாட்டம் அதிகம். குழந்தைகளின் கையில் இருக்கும் பிஸ்கட், நொறுக்குத் தீனிகளைப் பார்த்தால் போதும். பிடுங்கிக்கொண்டு ஓடிவிடும். பெண்கள் தோளில் தொங்கும் கைப்பையையும் விட்டு வைக்காது. தலையைச் சொறிவதும், மரக்கிளைகளில் குதிப்பதும், ஒற்றைக் கையில் ஊஞ்சல் ஆடுவதும், ஈ என்று வாயைத் திறந்து கத்துவதுமாய் ஏராளமான சேட்டைகள் செய்யும்.வழக்கம் போல தன் பரிசலை, கட்டுத்துறையில் இருந்து அவிழ்க்கப் போன பரிசல் ஓட்டிக்கு அன்று ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு குரங்கு தன் குட்டியோடு பரிசலில் உட்கார்ந்து இருந்தது.ஏதோ வேடிக்கையாக உட்கார்ந்து இருக்கலாம் என்று நினைத்தார். ஆனால் பரிசலைத் தண்ணீரில் மிதக்க விட்டப் பிறகும் குரங்குகள் வெளியேறாமல் அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டார்.''ஏய்....சூ... எழுந்து ஓடுங்க ...'' என்று கையை அசைத்து விரட்டிப் பார்த்தார். குரங்குகள் சற்று நகர்ந்து அமர்ந்தனவே ஒழிய, ஓட முயற்சிக்கவில்லை. அடிக்கப் போவது போல கயிற்றைச் சுழற்றினார். ம்ஹூம், அவை அசைவதாக இல்லை. அவருக்கு ஏதோ புரிந்தது. ஆற்றில் சிறிது தூரம் படகை செலுத்தினார். குட்டிக் குரங்கு தன் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தது. கீ...ஈ...ஊ... என்று மகிழ்ச்சியில் கத்தியது. அருகில் இருக்கும் தன் அம்மாவை முத்தமிட்டு மகிழ்ந்தது.குட்டியின் சேட்டைகளைப் பார்த்து பரிசல் ஓட்டிக்கு சிரிப்பு வந்துவிட்டது. 'அடக் கழுதைகளா... சவாரிக்கு வந்திருக்கீங்களா...?' உற்சாகமாகப் பரிசலை செலுத்தினார். இக்கரையில் இருந்து அக்கரைக்குச் சென்று பரிசலைக் கொண்டு வந்து நிறுத்தினார். குரங்குகள் இரண்டும் படகோட்டியை நன்றியோடு பார்த்தன. பின் பரிசலை விட்டு தாவி குதித்து கரைக்கு ஓடின.சிரித்துக்கொண்டே டாட்டா காட்டினார் பரிசல் ஓட்டி.-இ.எஸ்.லலிதாமதி