UPDATED : ஆக 17, 2024 11:36 AM | ADDED : ஆக 17, 2024 11:31 AM
சென்னை-மகாலிபுரம் சாலையில் உள்ள திருவிடந்தை என்னும் இடத்தில் நடந்துவரும் சர்வதேச காத்தாடி திருவிழாவில் இடம் பெற்றுள்ள கார்ட்டூன் உருவத்திலான காத்தாடியைக் காணவரும் குழந்தைகள் பெரிதும் மகிழ்கின்றனர்.
தாய்லாந்து,பிரான்சு,வியட்நாம் உள்ளீட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த நாற்பதிற்கும் மேற்பட்ட காத்தாடி நிபுணர்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட காத்தாடிகளை பறக்கவிடும் காத்தாடி திருவிழா மூன்றாவது ஆண்டாக திருவிடந்தை கடற்கரையில் நடந்துவருகிறது.
ஆயிரம் ரூபாயில் இருந்து நான்கு லட்ச ரூபாய் வரையிலான காத்தாடிகள் இடம் பெற்றுள்ளன.ராட்சத வடிவிலான கம்பளிப்பூச்சி,ஜல்லிக்கட்டு,திமிங்கலம்,பல்வேறு வித மீன்கள்,விலங்குகள் உருவம் கொண்ட காத்தாடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.பார்வையாளர்கள் மிக அருகே சென்று காற்றாடி விடுவதை பார்த்து ரசிக்கின்றனர்.
சில காற்றாடிகள் விண்ணில் பலவிதமாக சுழன்று சுழன்று வித்தை காட்டுகிறது.காற்று பலமாக வீசக்கூடிய மதியம் இரண்டு மணியில் இருந்து மாலை 6 மணி வரை காத்தாடிகள் பறக்கவிடப்படுகின்றன பின்னர் இரவு 9 மணி வரை பார்வையாளர்களை கவரும் விதத்தில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த காத்தாடி திருவிழாவிற்கு அனுமதிக்கட்டணம் உண்டு.
-எல்.முருகராஜ்