உள்ளூர் செய்திகள்

அம்மாவே தெய்வம்

அலுவலகம் சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்தான் ரவி. எப்போதும் போல் மனைவி தீபா தன் பல்லவியை ஆரம்பித்தாள். ''ஏங்க! உங்க அம்மாவோட தொல்லையா இருக்கு... எப்ப பார்த்தாலும் இருமிக்கிட்டே இருக்காங்க! சீக்கிரமா அவங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிற வழியைப் பாருங்க!'' என்றாள். அப்பா இறந்து மூன்று மாதம் ஆன நிலையில், புற்று நோயால் அவதிப்படும் தன் அம்மாவை புறக்கணிக்க அவனுக்கு மனமில்லை. ஆனால் மனைவியின் நச்சரிப்பு தொடர்ந்தது. திடீரென ஒருநாள், ''இன்னிக்கு உங்க அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்காவிட்டால் நான் எங்க அம்மா வீட்டுக்கு கிளம்பிடுவேன்'' என மிரட்டினாள் தீபா. இதையறிந்த அவனது அம்மா, ''ஏண்டா ரவி! நீ ஏன் என்னால கஷ்டப்படணும்? எனக்கு புற்றுநோய் இருக்குன்னு தானே மருமகள் முதியோர் இல்லத்துல சேர்க்க சொல்றா! எனக்கும் அது தான் சரின்னு படுது. நான் கும்பிடற முருகப்பெருமான் என்னைக் காப்பாத்துவான்'' என்றார். அரைமனதுடன் அம்மாவை அழைத்துச் சென்று இல்லத்தில் சேர்த்தான். ஒரு மாதம் கடந்தது. ஒருநாள் காலையில் அலைபேசி ஒலித்தது. ரவியின் நெருங்கிய நண்பன் முகேஷ் அழைத்தான்.'' டே... ரவி! எங்க அம்மாவுக்கு ஒரு வருஷமா புற்றுநோய் இருந்திருக்கு. ஆனா நான் வருத்தப்படுவேன்னு சொல்லாமலே மறைச்சிட்டாங்க. இப்போ நிலைமை மோசமாயிடுச்சு! உலகத்தில் ஆயிரம் சாமிகள் இருந்தாலும் பெத்த தாயாகுமா'' என்று கண் கலங்கினான். இதைக் கேட்ட ரவிக்கு மனம் படபடத்தது. ''முகேஷ்! கடவுள் அருளால உங்க அம்மா நோயிலிருந்து மீண்டு வருவாங்க! என்னால முடிஞ்ச உதவியைச் செய்ய தயாராக இருக்கேன்'' என தைரியம் சொன்னான். 'தீபா! நான் உனக்கு நல்ல புருஷனா இருந்தேனே ஒழிய, அம்மாவுக்கு நல்ல மகனா இல்லையே' என கத்தி விட்டு முதியோர் இல்லம் நோக்கி ஓடினான். தன் தாய் லட்சுமி எங்கிருக்கிறார் என அங்குள்ள பணியாளரிடம் கேட்டான். ''சார்! நீங்க தான் அந்த லட்சுமியம்மாவின் மகனா, நாங்க பலமுறை போன் பண்ணியும் நீங்க எடுக்கவே இல்லை! அவங்க இறந்து பத்து நாளாச்சு சார்'' என்றாள். இதைக் கேட்ட ரவிக்கு மூச்சே நின்று போனது. 'உனக்கு துரோகம் செய்திட்டேனே அம்மா'' என கதறினான் ரவி. அப்போது பக்கத்து அறையில் அவனது அம்மா பேசும் குரல் கேட்டது. பதட்டமுடன் ஜன்னலில் எட்டிப் பார்த்தான். கண்களை அவனால் நம்ப முடியவில்லை. அவன் அம்மா லட்சுமி உட்கார்ந்திருந்தாள். மறுபிறவி கிடைத்தது போல உணர்ந்தான். ''ஏம்பா ரவி! இப்படி அழற... எப்ப வந்த?'' என்றாள் லட்சுமி. இதையெல்லாம் பார்த்த பணியாளர், ''மன்னிச்சிருங்க சார்! நான் வேலையில் சேர்ந்து ஒருமாதம் தான் ஆகுது. வேறொரு லட்சுமியம்மா இறந்ததை உங்களோட அம்மான்னு தப்பா நினைச்சுட்டேன்'' என்றார்.இதற்குள் அங்கு வந்த தீபா, ''மன்னிச்சிடுங்க அத்தை! இப்பவே வீட்டுக்கு வாங்க'' என காலில் விழுந்தாள்.