உள்ளூர் செய்திகள்

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 14

வெற்றி அருளும் விஜய கணபதி தடைகளை நீக்கி இறையருளோடு கூடிய வெற்றியை அருளுவதால் இவர் விஜய கணபதி என போற்றப்படுகிறார். தியான சுலோகம் பாசாங்குச ஸ்வதந் தாம்ர பலவாந் ஆகு வாஹந: |விக்நம் நிஹந்து நஸ் ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக: || பாசம் - பாசம் எனும் ஆயுதம் அங்குச - அங்குசம் எனும் ஆயுதம் ஸ்வதந்த - தனது ஒடித்த தந்தம் ஆம்ர - மாம்பழம் பலவாந் - இவற்றை ஏந்தியிருப்பவரும் ஆகுவாஹந: - பெருச்சாளியை வாகனமாக உடையவரும் ரக்தவர்ண: - குருதி போன்ற சிவந்த நிறம் கொண்டவருமாக விநாயக: - தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாத விநாயகராக (விளங்குபவர்) ந: - எங்களுடைய (பக்தர்களுடைய) ஸர்வம் விக்நம் - அனைத்து தடைகளையும் நிஹந்து - அழிக்கட்டும் பாசம், அங்குசம் : உயிரின் மூவகைப் பாசங்களை அகற்றுவதைக் குறிப்பது பாசம். புலனடக்கத்தையும் ஆணவ மலத்தை நீக்குவதையும் குறிப்பது அங்குசம். ஒடித்த தந்தம் : துாய்மையையும் மனஉறுதியையும் கொண்டு செயல்களை நிறைவேற்றுவதைக் காட்டுவது. பெருச்சாளி : உயிரை மூடியுள்ள ஆணவ மலத்தைக் குறிக்கும். சரணடையும் உயிரின் ஆணவத்தை அடக்கி வீடுபேற்றை அருள்பவர் கணபதி என்பதை உணர்த்துவது. மாம்பழம் : இன்ப துன்பங்களைக் கடந்து, பற்றற்ற நிலையை ஆன்மா அடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பலன் : வெற்றி கிட்டும்; பிறவாத நிலையான வீடுபேறு கிடைக்கும்.அருள் தொடரும்வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்