அப்படியே சாப்பிடுவேன்...
கருமியான செல்வந்தர் ஒருவர் தர்மம் என்பதை கனவில் கூட நினைக்க மாட்டார். நோயாளியான அவர், ஒருநாள் காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க வந்தார். ''சுவாமி... ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, புற்று நோயால் அவஸ்தைப்படறேன். இதில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்'' என அழுதார். ''கஷ்டமான பரிகாரம் இருக்கு. ஆனால் உன்னால் செய்ய முடியுமா'' எனக் கேட்டார்.''செய்யத் தயாரா இருக்கேன். குணமானால் போதும்''''அப்படியா சரி. முன் ஜென்ம பாவம் தான் நோய்க்கு காரணம். அதிலிருந்து விடுபட ஏழைகளுக்கு உதவு. மரத்திலுள்ள பழங்களை 'அப்படியே சாப்பிடுவேன்...' என மரம் சொன்னதுண்டா... தன்னிடமுள்ள தண்ணீரைக் கிணறு தானே குடிப்பதில்லையே... மற்றவருக்காக தாவரங்கள் பூக்கின்றன; காய்க்கின்றன; பழங்கள் தருகின்றன. கன்றுக்குட்டி குடித்தது போக, மீதிப்பாலை பிறருக்கு கொடுத்து உதவுகிறதே பசு. இப்படி தாவரம், விலங்குகளுக்கு இருக்கிற நல்ல புத்தி நமக்கு வேண்டாமா? உன் பணத்தை தர்மம் செய்வதில் நீ சந்தோஷப்பட வேண்டாமா? கோயில் திருப்பணி, அன்னதானம் செய்யலாம். ஏழைகளுக்கு உதவலாம்.மருந்து வாங்க உன்னிடம் பணம் இருக்கு. ஆனால் ஏழைகளிடம் அதற்கு பணம் இல்லை. உயிரை விடும் போது உன் பணத்தை நீ கொண்டு போவாயா... மற்றவருக்கு உதவி செய்தால் நிம்மதி கிடைக்கும். நோயின்றி நுாறாண்டு வாழலாம்'' என்றார் மஹாபெரியவர். 'உதவி செய்வேன்' என உறுதி அளித்தார் செல்வந்தர். சுவாமிகளும் ஆசியளித்து பிரசாதம் வழங்கினார்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.