சாப்பாட்டு ராமன்
'போதும்! திருப்தியா சாப்பிட்டேன்' என்று சொல்லும் விதத்தில் திவச வீட்டில் சாப்பாடு தடபுடலாக இருக்க வேண்டும் என்பர். இதற்காக உன்னி கிருஷ்ணன் என்பவர் தன் தந்தையின் திவச சாப்பாட்டை விசேஷமாக செய்திருந்தார். அதில் பங்கேற்க ராமன் என்பவர் வந்திருந்தார். வயிறு முட்ட சாப்பிட்ட ராமன், 'திருப்தி! திருப்தி!' என்று இலையை விட்டு எழுந்தார். தட்சிணையைப் பெற்றுக் கொண்டு திண்ணையில் வந்து அமர்ந்தார். அந்த நேரம் பக்கத்து வீட்டில் பலாப்பழ பாயாசம் (சக்கை பிரதமன்) தயாராகிக் கொண்டிருந்தது. அதன் வாசனை மூக்கைத் துளைத்தது. ஆசையுடன் அவர்களின் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தார் ராமன். ராமனைக் கண்ட அந்த வீட்டுக்காரர், ''பாயாசம் வேணுமா உமக்கு?'' எனக் கேட்டார்.ராமனும் தலையசைக்க, பாயாசமும் வந்தது. ராமன் விருப்பமுடன் குடித்தார்.இதைக் கண்ட உன்னிகிருஷ்ணன், ''பாயாசத்திற்கு மட்டும் உமது வயிற்றில் இடம் இருக்கா?'' எனக் கேட்டார். ''வயிறு முட்டச் சாப்பிட்டதால் தான் திருப்தி என்றேன். இருந்தாலும் சக்கை பிரதமன் என்பதால் எப்படியோ இடம் வந்து விட்டது'' என்றார். ''அதெப்படி முடியும்?'' என்றார் உன்னி. ''பத்மநாபசுவாமி கோயில்ல திருவிழா கூட்டம். எள் போட இடமில்லை. ஆனா, திருவனந்தபுரம் மகாராஜா திடீர்னு தரிசனத்துக்கு வந்தா கோயிலுக்கு வெளியவா நிறுத்த முடியும்? கூட்டத்தை விலக்கி உள்ளே அனுப்புறதில்லையா?'' என்று விளக்கமளித்தார் ராமன்.இதைக் கேட்ட உன்னி, “நீர் சரியான சாப்பாட்டு ராமன் என்பதை நிரூபித்து விட்டீர்'' என சிரித்தார்.