உள்ளூர் செய்திகள்

ஒளிஞ்சிருக்காரு ஒட்டக குரு

மனம் போன போக்கில் நடக்கும் ஒரு இளைஞன், குருவாக ஒருவரை ஏற்றான். ஆனால் அங்கிருந்த கட்டுப்பாடுகள் பிடிக்காமல், சுதந்திரமாக இருக்க எண்ணி புறப்பட்டான். வழியில் ஒரு ஒட்டகம் மேய்ந்து கொண்டிருந்தது. அதன் அருகில் சென்று ''எனக்கு பொருத்தமான குரு யாரும் இல்லையே'' என்றான். அதை ஆமோதிப்பது போல ஒட்டகமும் தலையசைத்தது. ''ஆகா! வாயில்லா ஜீவன் என்றாலும், நான் சொல்வது இதற்கு புரிகிறதே'' என மகிழ்ந்தான். அதையே குருவாக ஏற்றான். ஒட்டகத்தை கேட்காமல் எதுவும் செய்வதில்லை என முடிவெடுத்தான்.சில நாட்களில் ஒரு பெண் மீது காதல் கொண்டான்.ஒட்டகத்திடம் ''அவளைக் காதலிக்கலாமா?'' எனக் கேட்டான். வழக்கம் போல தலையாட்டியது. சந்தோஷத்துடன் காதலிக்க தொடங்கினான்.சில மாதம் போனது. அவளை திருமணம் செய்ய விரும்பினான். ''ஒட்டக குருவே! அவளை கல்யாணம் பண்ணிக்கலாமா?'' என்றான். அதுவும் தலை அசைக்க, 'உத்தரவு குருதேவா!' என அவளை மணந்தான்.போதிய வருமானம் இல்லாததால் அப்பெண் சண்டையிட்டாள்.வருத்தத்துடன் குருவிடம் வந்து, 'மதுவைக் குடித்து மனக்கவலை போக்கலாமா?'' எனக் கேட்டான்.வழக்கம் போல தலை அசைக்க, குருவின் சம்மதம் கிடைத்ததாக எண்ணி குடிகாரனாகி வாழ்வை இழந்தான்.இதைப் போல, 'மனம்' என்னும் ஒட்டகம் நமக்குள் ஒளிந்து உள்ளது. அது சொல்வதில் நல்லதை மட்டும் ஏற்க வேண்டும்.