உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
UPDATED : மே 22, 2023 | ADDED : மே 22, 2023
மே 25, 2023 - சேக்கிழார் குருபூஜைதொண்டை மண்டலத்தில் புகழ்பட விளங்கியது குன்றத்துார் (காஞ்சிபுரம்). அங்கு வேளாண் குடியில் சேக்கிழார் மரபில் பிறந்தவரே அருண்மொழி ராமதேவர். இவர்தான் பெரியபுராணம் என்னும் பொக்கிஷத்தை அருளிய சேக்கிழார். ஒழுக்கம், அரசியல் ஆற்றல், நாவன்மை, புத்திக்கூர்மையை இவர் பெற்றிருந்தார். இவருடைய தந்தை சோழ அரசன் அநபாயனிடம் அமைச்சராக இருந்தார். 'அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்' என்ற மூதுரைக்கு ஏற்ப, சேக்கிழாரை தலைமை அமைச்சராக்கினார் அரசர். பின் அவர் திறமையாக செயல்பட்டு, 'உத்தம சோழப் பல்லவர்' என்ற பட்டத்தை பெற்றார். ஒருமுறை திருநாகேஸ்வரத்திற்கு (தஞ்சாவூர்) சென்று சிவபெருமானை தரிசித்ததால், அவர் மீது காதல் கொண்டார் சேக்கிழார். இதனால் தன் ஊரான குன்றத்துாரில் கோயில் கட்டி, சுவாமிக்கு 'திருநாகேஸ்வரர்' என பெயரிட்டார். இப்படி இவர் திருப்பணிகளை செய்தபோது, அரசர் சிற்றின்பத்தில் காலத்தை கழித்தார். திருத்தக்கத்தேவர் எழுதிய சீவக சிந்தாமணியை (சமண நுால்) கற்றும், கேட்டும் வந்தார். 'தமிழகத்தில் சமணக் கொள்கை வேரூன்றி விடுமோ' என பயந்தார் சேக்கிழார். ஒருநாள் அரசரிடம், ''சமண நுால்களை படிப்பது பயனற்றது. நல்ல கறவைப் பசு இருக்க மலட்டுப் பசுவிடம் பாலை எதிர்பார்ப்பது போல் அல்லவா இருக்கிறது உங்களது செயல். சிவபெருமானின் கதைகளை படியுங்கள். இம்மை, மறுமை, வீடு ஆகிய மும்மைக்கும் அவை நன்மை பயக்கும்'' என்றார். ''அப்படியா அமைச்சரே! சிவக்கதைகளுக்கு முதல் நுால் ஏதேனும் உண்டா?'' எனக் கேட்டார்.''சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகையை ஆதாரமாகக் கொண்டு நம்பியாண்டார் நம்பி 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்னும் நுாலைப் பாடியுள்ளார். அதை செப்பேடு செய்து பத்திரப்படுத்தியுள்ளார் மன்னர் ராஜராஜசோழன். அந்த வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்'' என வேண்டினார். இதை அநபாயச் சோழனும் ஏற்க, சேக்கிழார் சிவனடியார்களின் வரலாற்றை விவரிக்க ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.''அமைச்சரே! இவர்களது வரலாற்றை காவியமாக்கித் தந்தருள வேண்டும்'' என வேண்டினார் அரசர். அவரும் இம்மையில் தான் பெற்ற வரத்தை எண்ணி வியந்தார். பிறகு அதற்கு தேவையான பொன்னையும், பொருளையும் பெற்று சிதம்பரத்திற்கு சென்றார். நடராஜரை வணங்கி காவியம் பாடும் திறத்தை வேண்டினார். அப்போது விண்வழியே, 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' என்ற அடியை முதலடியாய் எடுத்துக் கொடுத்தார் நடராஜர். தித்திக்கும் தேனமுதம் போல் பக்திச் சுவைப் பெருக்கோடு, தேன் சிந்தும் தமிழில் பாடிமுடித்தார். இதுதான் பெரியபுராணம். சித்திரை மாதம் திருவாதிரையன்று அரங்கேற்றமான பெரியபுராணம் பதினொரு திருமுறை களுடன் சேர்ந்து பன்னிரண்டாவது திருமுறையானது.