இட்டார் கெட்டார்...இடாதார் வாழ்ந்தார்
UPDATED : நவ 14, 2019 | ADDED : நவ 14, 2019
முருக பக்தரான வாரியார் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர். எதிர்மறையான விஷயத்தைக் கூட நேர்மறையாக சிந்திப்பவர். ஒருநாள் சொற்பொழிவுக்காக செல்லும் போது,''திருநீறு இட்டார் கெட்டார்... திருநீறு இடாதார் வாழ்ந்தார்'' என நாத்திகர் சிலர் சுவரில் எழுதியிருக்கக் கண்டார். ''சுவாமி... காலம் கெட்டுப் போச்சு; என்ன எழுதி இருக்கு பார்த்தீர்களா?'' என்றார் உதவியாளர். ''இல்லை...சரியாகத் தான் இருக்கிறது'' என வாரியார் மறுத்தார். ''சாமி...நீங்களுமா இப்படி சொல்கிறீர்கள்?” என்றார் அவர்.''நன்றாக பதம் பிரித்து படித்து பார்” என்ற வாரியார் “திருநீறு இட்டு யார் (இட்டு + யார் = இட்டார்) கெட்டார்” என்றும், அடுத்தது 'திருநீறு இடாது யார் (இடாது+யார்=இடாதார்) வாழ்ந்தார்' என்றும் விளக்கினார். முருகப்பெருமான் அளித்த அறிவுக்கொடையைத் தான் என்னவென்று சொல்வது?