உள்ளூர் செய்திகள்

மொழியின் முதல்வி

துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் பிறந்தவர் குமரகுருபரர். இவர் ஐந்து வயதில் திருச்செந்துார் முருகப்பெருமான் அருளால் பேசும் சக்தியை பெற்றார். சிறு வயதில் இருந்தே தல யாத்திரை மேற்கொண்ட இவர் ஒரு சமயம் காசிக்குச் சென்றார். அங்கு கங்கையில் மடம் ஒன்றை அமைக்க எண்ணினார். அங்கு முகலாயர் ஆட்சியினரே காசி உள்ளிட்ட பல பகுதிகளை நிர்வாகம் செய்தனர். மடம் நிறுவுவது தொடர்பாக அவர்களை சந்திக்க விரும்பினார் குமரகுருபரர். அதனால் தவ வலிமையால் சிங்கம் ஒன்றை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்து அவர்களது அரண்மனைக்கு சென்றார். அதைபார்த்து வியப்பில் ஆழ்ந்தாலும் முகலாய மன்னர் ஏதுவும் பேசவில்லை. காரணம் குமரகுருபரருக்கு அவர்கள் பேசும் மொழி தெரியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட ஞானவாணியாகிய சரஸ்வதியை மனதில் தியானித்தார். அவரது வாக்கில் இருந்து சகலகலா வல்லிமாலை என்னும் பத்து பாடல்கள் பிறந்தது. அதைக்கேட்டு மனம் குளிர்ந்த சரஸ்வதி அவருக்கு பிறமொழி பேசும் வல்லமையை தந்தாள். மன்னரிடம் பேசி காசிமடம் அமைக்க நிலத்தை பெற்றார். கங்கை கரையில் கேதார கட்டத்தில் இம்மடம் உள்ளது. இன்றும் சரஸ்வதியின் அருளைப் பெறவும், இம்மடத்திலுள்ள குருநாதரையும் குழந்தைகள் வணங்கி சகலகலா வல்லி மாலை பாடி வர படிப்பில் சிறந்து விளங்குவர். மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண்ட அளவில் பணிசெய்வாய் படைப்போன் முதலாம்விண்கண்ட தெய்வம்பல் கோடி உண்டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலா வல்லியே.