அதிசய அருளாளர்
அன்பும், அருளும் இணைபிரியாத குணங்கள். இந்த குணங்களின் வடிவாக வாழ்ந்தவர் காஞ்சி மஹாபெரியவர். வாயில்லா ஜீவன்களுக்கும் பசிக்குமே என கவலைப்படும் அவர் தன்னை நாடி வரும் பக்தர்கள் மீது எவ்வளவு கரிசனம் காட்டுவார் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்தியா முழுவதும் அவரது மென்மையான பாதம் நோக நடையாய் நடந்து 'நடமாடும் தெய்வம்' என போற்றப்பட்டார். இதற்கு காரணம் நாடி வருவோரின் குறை தீர்த்ததோடு, வர இயலாதவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அருள்புரிந்தார். சில சமயம் அவரது பாதம் கொப்பளித்து விடும். இதைக் கண்ட சீடர்கள் வேதனைப்பட்டாலும், தான் படும் வேதனையை பொருட்படுத்த மாட்டார். வெயில், மழை, குளிர் என எந்த காலமாக இருந்தாலும் அவரின் புனித யாத்திரை நின்றதில்லை. கிரிவலம் செல்ல சாலை, மின்விளக்கு, குடிநீர் வசதி, இளைப்பாற இடம் என வசதிகள் செய்து கொடுத்தாலும் சிரமப்படுபவர்களின் நடுவே, மிக கடினமான பர்வத மலை, காளஹஸ்தி மலை, திருக்கழுக்குன்றம் உட்பட அனைத்தையும் வலம் வந்தவர் அவர். மணிக்கணக்கில் நடந்தாலும் மடத்தில் அவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளான பூஜைக்கோ, ஜபத்திற்கோ, தவத்திற்கோ, பக்தர்களின் குறை தீர்க்கவோ அந்த பண்பாளர் தயங்கியதில்லை. பக்தர்களுக்கு ஆசியளித்து அவர்களை சாந்தியுடன் வழியனுப்புவதில் அவருக்கு நிகர் அவரே. காஞ்சிபுரம் செல்லும் பக்தர்கள் அவரது சமாதியின் முன் நின்று முறையிடுவதும், வலம் வருவதும் அருள் பெற்று திரும்புவதும் அன்றாட நிகழ்வு.''என்கிட்ட வருவோர் தங்களின் குறைகளைச் சொன்னால் பாரம் குறைஞ்சு போறதா நினைக்கறா. அதை நான் கெடுப்பானேன்'' என்று மஹாபெரியவர் சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த தொண்டர் துரைசாமியின் மகன் சுந்தர்ராமன்(மாணவர்), ''உங்களைத் தரிசிக்க பலரும் வர்றாங்க அதுல எல்லோரும் பக்தர்களா இருக்க முடியாது. பலபேர் பலவேலையாக காஞ்சிபுரம் வந்துட்டு, அத்துடன் மடத்துக்கும் வர்றாங்க. பெரியவரை தரிசனம் செய்தோம்னு பெருமை பேசுறாங்க. மாணவர்கள் சிலர் தேர்வு நேரத்தில பெரியவரிடம் பிரசாதம் வாங்கினா பாஸ் ஆயிடுவோம்னு வர்றாங்க. இவங்க மாதிரி ஆட்களை ஊக்குவிக்க கூடாது'' என்றார். மஹாபெரியவர் பதில் ஏதும் சொல்லவில்லை. இதன்பின் இரண்டு மாதத்திற்கு பிறகு மாணவரான சுந்தர்ராமன் ஒருநாள் காஞ்சிபுரம் வந்திருந்தார். பூஜை முடிந்து பிரசாதம் வழங்க தயாரானார் பெரியவர். அப்போது ஒரு மாணவர் தேர்வு இருப்பதாகவும், வெற்றி பெற ஆசியளிக்க வேண்டும் என்றும் கேட்டான். அப்போது பெரியவர், ''படிக்கிற சமயத்தில ஊரைச் சுத்திட்டு, பரீட்சைக்கு மட்டும் எங்கிட்ட பிரசாதம் கேக்கிறயே. உனக்கு பிரசாதம் தரப் போறதில்லை'' என்றார். அவனும் அங்கிருந்து நகர்ந்தான். மவுனமாக அருகில் நின்ற சுந்தர்ராமனிடம், ''இப்போ உனக்கு சந்தோஷமா? இரண்டு மாதம் முன்பு நான் எப்படி நடக்கணும்னு எனக்கு பாடம் எடுத்தியே?'' என்றார். வருந்தினார் சுந்தர்ராமன்.''யார் என்னை பார்க்க வரலாம் என நான் சொல்ல மாட்டேன். வருவோரின் குறைகளை கேட்டு பிரசாதம் தர்றேன். அது என் கடமை. யாரிடமும் எந்த அற்புதமும் செய்யறதா நான் சொல்லலை. அப்படி நடக்கிறதா அவங்களே சொல்றா'' என தன் மனநிலையை வெளிப்படுத்தினார் அந்த கருணாமூர்த்தி. மஹா பெரியவரின் பாதங்களில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டினார் சுந்தர்ராமன். காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.* இன்று செய்த நன்மை, தீமைகளை உறங்கும் முன் சிந்தியுங்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்எஸ்.கணேச சர்மாganesasarma57@gmail.com