காலில் விழுந்தாலாவது காரியம் ஆகுமா?
கர்நாடக அரசியலையே, தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் அமைச்சரும், சுரங்க ராஜாவுமான ஜனார்த்தன ரெட்டி, தற்போது சிறை கம்பிகளுக்கு பின் வாசம் செய்வதால், கலங்கிப் போய் இருக்கிறார். சுரங்கத் தொழிலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, இவர் கைது செய்யப்பட்டு, ஐதராபாத்தில் உள்ள, சஞ்சலக்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெளியில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த ஜனார்த்தன ரெட்டியால், சிறை வாழ்க்கையை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. எப்படியாவது வெளியில் வந்து விடவேண்டும் என, துடி துடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், சட்ட விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், சுவரில் அடித்த பந்து போல், அனைத்து கோர்ட்டுகளிலும், அவரது ஜாமின் மனுக்கள், திரும்ப வந்து விடுகின்றன. இதனால், நம்பிக்கை இழந்த நிலையில், சிறை அறையின் விட்டத்தை பார்த்தபடி அவர் புலம்பிக் கொண்டிருப்பதாக, சிறை அதிகாரிகளே, பரிதாபப்படுகின்றனர். சிறையில் எந்த நேரமும், ஆன்மிக புத்தகங்களைத் தான் அவர் படித்துக் கொண்டிருக்கிறாராம். சமீபத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, போலீசார் அவரை அழைத்து வந்திருந்தனர். அப்போது, 'உங்களது முழுத் திறமையையும் பயன்படுத்தி, எப்படியாவது எனக்கு ஜாமின் பெற்றுத் தந்து விடுங்கள்' என, தன் வழக்கறிஞர்களிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தார் ரெட்டி. இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது உறவினர்கள், 'ராஜா மாதிரி இருந்தவர், இப்படி காலில் விழுந்து கெஞ்ச வேண்டிய நிலைக்கு ஆளாகி விட்டாரே' என, உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் வடித்தனர்.