மக்கள் ஓட்டு காங்கிரசுக்கே...!
உள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் நடத்திய சிறப்புக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'காங்கிரஸ் கட்சி, 12 ஆயிரத்து, 618 இடங்களில் தனித்து போட்டியிடும்' என்றார்.அவரிடம் நிருபர் ஒருவர், 'எதை முன்வைத்து பிரசாரத்தை துவக்கப் போகிறீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு, 'மத்திய அரசு செய்த பல்வேறு சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு மக்களிடம் ஓட்டு கேட்போம்' எனக் கூறினார்.இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்த்தினாங்களே, அந்த சாதனையை முதல் பிரசாரமா வையுங்க சார்... மக்களோட எல்லா ஓட்டும் உங்களுக்கு தான்' என, 'கமென்ட்' அடித்ததும், பலத்த சிரிப்பலை எழுந்தது.
தேசிய நெடுஞ்சாலையை மறந்த அழகிரி
பண்ருட்டியில் சிறுபான்மைப்பிரிவு சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்கம் மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கடலூர் காங்., எம்.பி., அழகிரி பேசுகையில், 'இந்திய அளவில் மத்திய அரசு சாலைகள் தரமாக உள்ளன. அனைத்து மாநிலங்களும் இதை பின்பற்ற அப்போது நிதிஅமைச்சராக இருந்த சிதம்பரம் சுற்றறிக்கை அனுப்பினார். அதை குஜராத் மாநிலம் மட்டுமே கடைபிடித்து, மத்திய அரசு சாலைக்கு இணையாக மாநில சாலை அமைக்க முன் வந்தது. இங்கு, விக்கிரவாண்டி - பண்ருட்டி சாலை தரமற்று உள்ளதால் யாரும் அவ்வழியே செல்வதில்லை. பக்கத்தில் உள்ள, சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலை எப்படி உள்ளது என, விழுப்புரத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்' என்றார். எம்.பி.,யின் பேச்சை கவனித்த கதர் ஆடை ஒருவர், 'விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, 45சி யாக மாறி, ஆறு ஆண்டுகளாகியும் தெரிந்து கொள்ளாமல் உள்ளார். இவர்களுக்கு கோஷ்டி மட்டும் தான் தெரியும். இதனால் தான் காங்கிரஸ் தமிழகத்தில் உருப்படாமல் உள்ளது' என, மற்றொரு கதர்சட்டையிடம் புலம்பினார்.