காற்றுப் பை! (ஏர் பேக்)
காரில் பாதுகாப்புக்காக அமைக்கப்படுவது தான் காற்றுப் பை என்ற, 'ஏர்பேக்' கருவி. விபத்து ஏற்பட்டால், பயணியர் உயிரைக் காக்கும். உயர் தொழில் நுட்பத்தில் தயாரானது. இன்று அனைத்து கார்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஏர்பேக் தொழில் நுட்பம் குறித்து பார்ப்போம்...ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்தவர் வால்டர் லின்டரர். இவர் தான், காற்று நிரப்பிய ஏர்பேக் கருவியை, 1941ல் உருவாக்கினார். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த ஜான் டபிள்யூ ஹெட்ரிக், இந்த தொழில் நுட்பத்திற்கு, 1951ல் காப்புரிமை பெற விண்ணப்பித்தார். அவருக்கு ஆகஸ்ட், 1953ல் காப்புரிமை வழங்கியது அமெரிக்கா. அதைத் தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு பின், ஜெர்மனியில் காப்புரிமை பெற்றார் வால்டர் லின்டரர். இவரது தயாரிப்பு தான், விபத்து நேரத்தில் சிறப்பாக செயல்பட்டது; உயிரிழப்புகளை தடுத்தது.கிழக்காசிய நாடான ஜப்பானை சேர்ந்த பொறியாளர் யசுசபுராவ் கபோரி. இவர், 1964ல் வடிவமைத்த, 'சேப்டி நெட்' என்ற ஏர்பேக் தொழில் நுட்பத்துக்காக, 14 நாடுகளில் காப்புரிமை பெற்றார். அந்த கருவி, நடைமுறை சிக்கலால் பிரபலமடையவில்லை.தொடர்ந்து, 1967ல், ஏர்பேக் தொழில் நுட்பத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. விபத்தின் போது காரில் உள்ளே நடப்பதை, 'சென்சார்' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆராய்ந்தார் ஆலன் கே பிரீடு. அவர் தான் விபத்து ஏற்பட்ட நொடியில் விரிவடையும் வகையில், ஏர்பேக் கருவியை உருவாக்கினார்.இவர் உருவாக்கிய தொழில் நுட்பம் பிரபலம் அடைந்தது. வர்த்தக ரீதியில், 1970ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இதன் முக்கியத்துவத்தை, 1990ல் தான் உலகம் உணர துவங்கியது. முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஏர்பேக் கருவியை தங்கள் தயாரிப்பு கார்களில் பொருத்த துவங்கின.முதலில் ஓட்டுனர், அடுத்து முன் இருக்கை பயணி என துவங்கி, நவீன கார்களில் பயணம் செய்யும் அனைவருக்கும் ஏர்பேக் கருவி பொருத்தப்படுகிறது. அது தான், விபத்தின் போது, காரில் பயணிப்போர் தப்ப உதவுகிறது!- கவிதா பாலாஜிகணேஷ்