அதிமேதாவி அங்குராசு!
மின்னணு பண பரிவர்த்தனை!இணைய உலகில், 'டொமைன் ஸ்கில்ஸ்' என்ற, தள அறிவுத்திறன் இன்றைய தெழில்நுட்பத்தில், மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. அதில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு தான், பெரிய நிறுவனங்களில் அங்கீகாரம் கிடைக்கிறது.தொழில்நுட்பங்கள் மாறிக்கொண்டே இருந்தாலும், 'டொமைன்' மாறாதது. தொழில்நுட்பம் மாறும் வேகத்தோடு ஒப்பிடுகையில், மிக மெதுவாகவே மாற்றமடைகிறது.வங்கி, காப்பீடு, ரீடெயில், ஹெல்த்கேர், பேமென்ட் போன்ற நிறுவனங்களின் இணைய தளங்களே, இன்று மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இவற்றில், 'பேமென்ட் டொமைன்' என்ற பண பரிமாற்ற தளங்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.ஒரு பல்பொருள் அங்காடியில், பொருள் வாங்குகிறோம். பணம் செலுத்துமிடத்தில், ஏ.டி.எம்., கார்டு என்ற மின்னணு அட்டையை கொடுக்கிறோம். அதை, பி.ஓ.எஸ்., என்ற 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், சொருகியோ, தேய்த்தோ பண பரிவர்த்தனை செய்வர்.அலைபேசியில், 'ஆன்லைன்' என்ற நிகழ்நிலை பரிவர்த்தனை மூலமும், சில வினாடிகளில் வாங்கி விடலாம். நம் வங்கி கணக்கில் உள்ள பணம், வேறு ஒரு வங்கி கணக்குக்கு நொடியில் மாற்றும் சேவை தான் இந்த பரிமாற்றங்கள்.இவையெல்லாம் எளிதாக தோன்றும். இந்த பரிவர்த்தனைகள் எப்படி நடக்கின்றன; வங்கிகள், பணத்தை பரிமாறிக் கொள்வதை அறிந்து கொள்வதைத் தான், 'பேமென்ட் டொமைன் ஸ்கில்' என்கின்றனர்.சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம்:பல்பொருள் அங்காடியில், பொருள் வாங்குகிறோம். பண பரிமாற்றத்துக்கு, மின்னணு அட்டையைக் கொடுக்கிறோம். அங்கு பண பரிமாற்றம் செய்யும் பி.ஓ.எஸ்., இயந்திரம், ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும். நாம், 'பின் நம்பர்' என்ற ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளிட்டதும் பரிமாற்றம் நடக்கும். அந்த கருவியில் குறிப்பிட்டிருக்கும் வங்கி தான், இணைக்கப்பட்டிருக்கும்.அந்த வங்கியை, 'அக்யூரர் பேங்க்' என்பர்; அதாவது, 'சேவை பெறுபவர்' என புரிந்து கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் மின்னணு அட்டை வழங்கிய வங்கியை, 'இஸ்யூவர் பேங்க்' என்பர். இதை, 'சேவை வழங்குபவர்' என புரிந்து கொள்ளலாம்.இந்த இரண்டு வங்கிகளுக்கும் இடையே நடக்கிற பரிவார்த்தனை, ஒரு செயலாக்க கட்டமைப்பு வழியாகத்தான் செல்ல வேண்டும்.இதை, 'பேமென்ட் கேட்வே' மென்பொருள் நிறுவனம் நிர்வகிக்கும். இந்த சேவைக்கு, குறிப்பிட்ட கட்டணத்தையும் அந்த நிறுவனம் வசூலிக்கும். நொடியில் நடக்கும் பண பரிமாற்றத்தை எத்தனை நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன பார்த்தீர்களா... நவீன அறிவியல் சாதனங்களால், பணம் பரிமாறுவது சுலபமாகவும், நம்பகமாகவும் நடக்கிறது. இந்த கருவிகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வது, இன்றியமையாத தேவையாகும்.அலைபேசி அமிழ்ந்தால்!தண்ணீருக்குள், அலைபேசி விழுந்தால், பழுது நீக்கும் மையங்களில் தான் சீராக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இப்போது தயாராகும் அலைபேசிகளில், 'இம்மெர்ஷன் சென்சார்' என்ற 'அழுத்த உணரி' தொழில் நுட்ப வசதி உள்ளது. தண்ணீரில், விழுந்த உடன் அழுத்த உணரி செயல்பட்டு, நீர் புகாமல் தடுக்கும். நீரால் பாதிக்கப்படும் அலைபேசிக்கு, இழப்பீடு பெறும் வகையில், திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன சில காப்பீடு நிறுவனங்கள். இவையன்றி, நீரில் விழுந்த அலைபேசியை எளிமையாக மீட்கும் வழிவகையும் உள்ளது. அது பற்றி பார்ப்போம்... நீரில் விழுந்த அலைபேசியை உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். பின், 'டிஷ்யூ பேப்பர்' என்ற நீர் உறுஞ்சும் காகிதத்தில் சுற்றி வைக்க வேண்டும். 'சிம் கார்டு' என்ற நுண்ணறி அட்டை மற்றும், 'மெமரி கார்டு' என்ற நினைவக அட்டைகளை அகற்றி, காற்றுப்புகாத பையில், சிறிது அரிசியுடன் அடைத்து வைக்க வேண்டும். இவ்வாறு, 48 மணி நேரம் வைத்தால், அலைபேசிக்குள் ஒட்டியிருக்கும் நீரை, அரிசி உறுஞ்சி விடும். நீரில் விழுந்த அலைபேசியை உலர்த்த, 'ஹேர் டிரையர்' என்ற கூந்தல் உலர்த்தியை பயன்படுத்த கூடாது. அது வெளியேற்றும் வெப்பக் காற்று, அலைபேசியில் உள்ள, நுட்பமான மின்னணுக்கூறு செயல்பாட்டை முடக்கி, செயலிழக்க செய்துவிடும்.உப்பு நீரில் விழுந்த அலைபேசியை, துாய நீரில் கழுவுவது தவறான விளைவை ஏற்படுத்தும். உப்பு நீரில் விழுந்த உடன் அலைபேசி பாகங்கள், ஆக்சிஜனேற்றம் என்ற பிராணவாயு ஏற்றம் அடைந்து விடும்.இவ்வகை பாதிப்பின் போது, அலைபேசியில் சேமித்துள்ள தரவுகளை, 'பேக் அப்' என்ற காப்பு நகல் எடுப்பது பயன்தரும். இந்த நடைமுறைகளால் அலைபேசி சரியாகி விட்டால், சேவை மையத்தில் கொடுத்து, செயல்பாட்டை பரிசோதித்துக் கொள்ளவும்.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.