பனையின் பயன்!
பனைமரம், அரிக்கேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்கு, ஓடகம், தாலம், கரும்புறம், காமம், பெண்ணை, போந்து, புற்பதி, புற்றாளி, தாளி, தருவீராகன் போன்ற பெயர்களும் உண்டு. இந்த மரம், 30 மீட்டர் வரை வளரும். கிளைக்காத உறுதியான தண்டைப் பெற்றிருக்கும். ஆண், பெண் மரம் தனித்தனியே காணப்படும். காற்று தடைப் பயிராக வெப்ப மண்டல நாடுகளில் வளர்க்கப்படுகிறது; தென்னையைப் போல், தோப்புகளில் நீர் பாய்ச்சி வளர்க்கப்படுவதில்லை. மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது; இது, 800 வகை பயன்களை தரும் என கண்டறிந்துள்ளனர்.இதன் ஓலைகள், கூரைகள் வேயவும், விசிறியாகவும் பயன்படுகிறது. புத்த மதத்தினர் பனையை புனிதமாக ஏற்று வணங்கி வருகின்றனர். பனங்கிழங்கு, பனை நுங்கு உடலுக்கு நன்மை தரும். உடல் அழற்சி, சீத பேதி போன்றவற்றை அடியோடு நிறுத்தும். நுங்கு நீரை உடலில் தடவி வர வேர்க்குரு நீங்கும். கோடையில், குளிர்ச்சி தர வல்லது நுங்கு.பனை மரத்தில் கிடைக்கும் பதனீரில், கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கலாம். பதநீர், கற்கண்டு மற்றும் கிழங்கு மருந்தாக பயன்படுகின்றன. காலையில் பதநீர் அருந்தினால், சக்தி கூடும்; பல நோய்கள் அகலும். பனம் பிஞ்சும் மருத்துவ குணங்களை கொண்டதாகும்; பிஞ்சை நசுக்கி, காயங்களுக்கு தடவ, ரத்த ஒழுக்கு நிற்கும்; பனம் பாளையை சுட்டு சாம்பலாக்கி, பித்த நோய்களுக்கு தரலாம்.ஆண் பனையின் பூங்காம்பைச் சுட்டு உருவாக்கிய சாம்பல் சிறுநீரைப் பெருக்கும்; ஈரல் நோயைப் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும்; மலத்தை இளக்கும்.பனங்கிழங்கை வேக வைத்தோ, நெருப்பு அனலில் சுட்டோ உண்ணலாம்.