உள்ளூர் செய்திகள்

கறுப்பு தாஜ்மஹால்

தாஜ்மஹால் என்றாலே, அதன் பளிங்கு வெள்ளை நிறம் தான் நினைவில் வரும். உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா நகரில், யமுனை நதிக்கரையில், மனைவி மும்தாஜ் நினைவாக, 1632ல், இதை கட்டியவர் மொகலாய பேரரசர் ஷாஜஹான்.வெள்ளை தாஜ்மஹாலை அழகு படுத்தும் வேலைகளை, ஐரோப்பா கண்டம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, அஸ்டின் டி போர்க்டெக் என்பவரும், இத்தாலி, வெனிஸ் நகரைச் சேர்ந்த, வெரோனியா என்பவரும் செய்தனர். நதியின் மறுகரையில், தாஜ்மஹால் போல் அச்சு அசலாக, கறுப்பு பளிங்கு கற்களால், தனக்கென ஒரு மாளிகை அமைக்க விரும்பினார் ஷாஜகான். இரண்டையும் இணைக்க, யமுனை நதியின் குறுக்கே, வெள்ளியால் ஒரு பாலம் கட்டவும் திட்டமிட்டிருந்தார்.ஆனால், பணியைத் துவங்கும் முன், ஷாஜஹான் காலமானார். கறுப்பு கல் மஹால் கட்டப்பட்டிருந்தால், அவர் புகழ் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.தாஜ்மஹாலுக்கு, ஒருமுறை அபாயம் வந்தது. இந்தியா - பாகிஸ்தான் போர், 1971ல் நடந்த போது, தாஜ்மஹாலை தாக்க போவதாக தகவல் பரவியது. தாஜ்மஹால் பிரதிபலிக்கும் ஒளி, பாகிஸ்தானிய போர் விமானங்களை ஈர்க்கும் என்று கணித்து, போர் முடியும் வரை, மஹாலை, முற்றிலும் மறைத்து, நம் ராணுவ வீரர்கள் காப்பாற்றினர். ஷாஜஹானின் மகன் அவுரங்கசீப், தன் முதல் மனைவி தில்ரஸ் பானு பேகம் நினைவாக, அவுரங்காபாத்தில், 1660ல், ஒரு கட்டடத்தை கட்டினார். அது தாஜ்மஹாலின் நகல் போலவே உள்ளது. அந்த கட்டடத்தின் பெயர், பீபீ கா மாக்பெர்ரா. அதை, 'டூப்ளிகெட் தாஜ்மஹால்' என்றே சொல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !