உள்ளூர் செய்திகள்

பழி!

கான்ஸ்டபிள் ராஜேந்திரன் கண்டிப்பான பேர்வழி. செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிப்பவர். நேர்மையானவர் என்று பெயர் வாங்கியவர். நல்லவர்களை நாடு சோதிப்பது நடைமுறையாயிற்றே. அன்று இரவு டூட்டியி லிருந்து காலை பத்து மணிக்கு வீடு திரும்பினார் ராஜேந்திரன்.வீட்டு கூடத்தில் மேஜை மீது புத்தம் புதிய, 'டிவி' ஒன்று புதுமணப் பெண்ணைப் போல ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தது.உடையைக் கழற்றிக் கொண்டே தன் மனைவி அமுதா விடம், ''ஏது இந்த புது, 'டிவி'... யார் வீட்டுக்கோ போக வேண்டியது, தவறு தலா இங்கே வந்துட்டுதா?'' என்று கேட்டார்.கணவனின் குரல் கேட்டு சமையலறை யிலிருந்து வந்த அமுதா, ''அப்ப நீங்க வாங்கி அனுப்பலையா?'' இதைக் கொண்டு வந்தவரிடம் நானும் இதையேதான் கேட்டேன். 'இந்த வீட்டுக்குத்தானா, வேற யாருக்காவது கொண்டு போக வேண்டியதை தவறா இங்கே கொண்டு வந்திருக்கீங்க போலிருக்கேன்னு' கேட்டேன்.''அதுக்கு அவங்க, 'இதுக்குப் பணம் கொடுத்து வாங்கினவங்க இந்த விலாசத்திலே கொண்டு போய்த்தான் டெலிவரி கொடுக்கச் சொன்னாங்கன்னு' நம்ம வீட்டு விலாசத்தைக் காமிச்சாங்க. ஒரு வேளை, நீங்கதான் வாங்கி அனுப்புனீங்களோன்னு...'' என்றாள்.ராஜேந்திரன் குழம்பிப் போனார். அதிசய மாக இருந்தது. தான் வாங்காமல், தன் விலாசத்துக்கு ஒருவர் 'டிவி'யை வாங்கி வலிய அனுப்புவதாவது! 'டிவி'யை நோட்ட மிட்டார். அதில், ஒரு சின்னக் கவர் சொருகப் பட்டிருப்பதைக் கண்டு பரபரப்போடு, அதை எடுத்துப் பிரித்தார். அதில், ''தகவல் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணே! இன்றைய தபாலை எதிர் பார்க்கவும்,'' என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தில் கையொப்பமேதுமில்லை,''என்னங்க அது கடிதம்...? என்று கேட்ட அமுதா, கேட் தாண்டி வரும் போஸ்ட் மேனைப் பார்த்தவளாக, ''அதோ, தபால் காரர் வராரு...'' என்று வெளியே போனாள்.தபால்காரர் கொடுத்த ரிஜிஸ்டர் கவரைப் பெற்றுக் கொண்டு, பாரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் போது...''கான்ஸ்டபிள் ராஜேந்திரன் இருக்காரா...?'' என்று கேட்டபடி, இன்ஸ் பெக்டர், செல்வம், அருண் நின்று கொண்டிருப்பதைக் கண்ட அமுதா, பரபரப்புடன் உள்ளே போனாள்.''இன்ஸ்பெக்டர் ஐயா வந்திருக்காரு!'' என்று கூறி ரிஜிஸ்டர் தபாலைக் கொடுத்துவிட்டு, சமையலறைக்குள் போய்ப் பதுங்கினாள்.''வாங்க சார்!'' என்று சல்யூட் அடித்து அவர்களை வர வேற்றார் ராஜேந்திரன்.''எங்களுக்கு டெலிபோன் கால்கள் வந்தன ராஜேந்திரன். நீ லஞ்சம் வாங்கிக் கொண்டு முக்கிய தகவல்களை சில பார்ட்டிகளுக்குத் தருவதாக...'' என்றார் இன்ஸ்பெக்டர்.ராஜேந்திரன் முகம் வெளுத்தது. உடனே கோபத்தினால் சிவந்தது.''இது அபத்தமான பொய், சார்! இது போன்ற காரியத்தை நான் செய்ததில்லை!''''அப்படியானால், உன் வீட்டை நாங்கள் சோதனையிடுவதில் ஆட்சேபனை ஏது மில்லையே...?'' என்ற இன்ஸ்பெக்டர், ராஜேந்திரனின் பதிலுக்காகக் காத்திராமல், ''செல்வம், அருண்... வீட்டை முழுக்க சர்ச் பண்ணுங்க,'' என்று உத்தரவிட்டார்.'டிவி' செட்டின் அருகே பிரித்துக் கிடந்த கடிதத்தில் செல்வத்தின் பார்வை விழ அதிக நேரமாகவில்லை. அதை நோட்டமிட்டவன், இன்ஸ்பெக்டரிடம் நீட்டியபடியே... ''ராஜேந்திரன் உன் கையிலுள்ள அந்த ரிஜிஸ்டர் தபாலைப் பிரித்துப் பார்க்கலாமே!'' என்றான்.நடுங்கும் கைகளால் அந்த ரிஜிஸ்டர் கடிதத்தை ராஜேந்திரன் பிரிக்க... அதிலிருந்து பத்து ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் வெளிப்பட்டுச் சிரித்தன. ராஜேந்திரன் நாக்குழற ''இது... இது... என்னன்னே புரிய லிங்க. நான் லஞ்சம் வாங்கறதை நினைச்சுக் கூடப் பார்த்ததில்லிங்க. என்னை மாட்டி வைக்க யாரோ செய்த சதி இது,'' என்று தடுமாற்றத் தோடு கூறினார்.''ஒரு போலீஸ்காரர் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அது அந்த இலாகாவையே குற்றம் சுமத்துவது போல... உன்னை வேலையிலிருந்து சஸ்பென்ட் செய்கிறேன். விசாரணை நடக்கும்,'' என்று கூறிவிட்டு இன்ஸ்பெக்டர், செல்வம் மற்றும் அருணுடன் வெளியேறினார். ராஜேந்திரன் இடிந்து போய், நாற்காலியில் செயலற்று விழுந்தார்.ஜீப்பில் போய்க் கொண்டிருந்த போது இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் கூறினார். ''இதன் மர்மத்தை விடு விப்பது உன் வேலை. ராஜேந்திரன் குற்றவாளியானால், அவனோடு தொடர்புடைய புள்ளி யார் என்பதைக் கண்டுபிடி. இல்லை யானால், அவனை குற்றவாளி யாக்கியது ஏன்? எதற்காக? என்பதைக் கவனி!''''ஆகட்டும்...'' என்றான் செல்வம்.''அருண் நீ இந்த ரிஜிஸ்டர் கடிதத்தைக் கவனி. நான் அந்த 'டிவி' செட்டை விற்ற கடையில் போய் விசாரிக்கிறேன்,''என்று உடனே செயலில் இறங்கினார் இன்ஸ்பெக்டர்.அன்று, பகலில், அருண் ரிபோர்ட். ரிஜிஸ்டர் அனுப்பிய வரின் விலாசத்தில் இருப்பது ஒரு கோயில் குருக்கள். விஷயத்தைக் கேட்டவர் நடுநடுங்கிப் போனார். மூர்ச்சையாகாத குறை.'முழுசாக ஒரு நூறு ரூபாயை நான் பார்த்ததேயில்லையே சார்!'' என்கிறார். பரிதாப கேஸ்.''அந்த 'டிவி' கடைக்காரர், தனக்கு அந்த ஆர்டரை டெலிவரி செய்யும்படி, தலைமை விற்பனை நிலையத்திலிருந்து உத்தரவு வந்தது. வாங்கியவரை, தான் பார்க்கவில்லை என்கிறார்.ஆகவே, நான் அவருடைய ஹெட் ஆபீஸை அணுக வேண்டும்,'' என்றான் செல்வம். அங்கும் உற்சாகமளிக்கும் விடை கிடைக்கவில்லை.''தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வருகின்றனர். பர்ச்சேஸ் முடிந்து பணம் செலுத்தியபிறகு எங்களுக்கு எல்லாரும் ஒன்றுதான். யாரையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்கள் வசதிக்காக, கஸ்டமர்கள் குறிப்பிடும் விலாசத்தில் பொருள்களை, விலாசதாரரின் அருகாமையில் உள்ள எங்கள் கிளைகளி லிருந்து டெலிவரி தரச் செய்வோம்,'' என்று விளக்கமளித்தார் கடை முதலாளி.அன்று முழுவதும் அலைச்சல்தான் மிச்சம். செல்வம் நிகழ்ச்சிகளை அசைபோட்டான். 'டிவி' செட் அன்பளிப்பு, ரிஜிஸ்டர் தபாலில் பணம், டெலிபோன்கால் எல்லாமே கச்சிதமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப் பட்டவை போலத் தெரிகிறது.''ராஜேந்திரன் அப்படியொன்றும் முக்கியமான புள்ளியில்லையே. சாதாரண கான்ஸ்டபிள். நேர்மையானவர்; தானுண்டு தன் பணி உண்டு என்றிருப்பவர். கண்டிப்பான பேர்வழி என்று பெயரெடுத் தவர். இது அருணின் விளக்கம்.''அதுவே, காரணமாக இருக்கலாம். பலவருடங்களாக கான்ஸ்டபிளாகவே இருக்கிறார். உத்தியோக உயர்வு ஏதுமில்லை. ஆகவே, குறுக்கு வழியில் பணம் பண்ண... ஆனால், இது என் ஊகம்தான்!'' என்ற செல்வம் மனதில், லேசான ஒரு நிழ லோட்டம்.''அருண், ராஜேந்திரன் இரவில் ரோந்து செல்லும் பகுதியின் நிலவரம் எப்படி?'' என்று கேட்டான்.''அதிகமான வியாபார நிறுவனங் கள் கிடையாது. இரண்டு பிரபல நகைக் கடைகள். ஒரு சூப்பர் மார்க்கெட். ஒரு பைனான்ஸ் கம்பெனி எனக்குத் தெரிந்தவரை இவைதான்,'' என்றான் அருண்.அன்று இரவு அவர்கள் பதினெட்டாவது அவென்யூவான அந்தப் பகுதிக்கு சென்றனர். செய்தனர். ராஜேந்தினுக்கு பதிலாக, வேறு ஒரு கான்ஸ்டபிள் டூட்டியிலிருந்தார். புதிய நபர், ''வீட்டு வசதி வாரியத்திலிருந்து இங்கு மாற்றப்பட்டிருக்கிறார் என்று நினைக் கிறேன்,'' இது அருணின் ஊகம்.''நாமும் இன்றிரவு இங்கு அவரோடு காவலிருப்போம்,'' என்றான் செல்வம்.நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. இரவின் நாடித் துடிப்பும் அதிகமாகிக் கொண்டிருந்தது. புதிய கான்ஸ்டபிளின் கவனத்தைக் கவராமலேயே செல்வம், அருணும் அப்பகுதியில் வளைய வந்தனர். அப்போது...- தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !