உள்ளூர் செய்திகள்

அன்பே வலிமை!

கோச்சடை என்ற ஊரில் நவநீதன் என்ற குட்டிப்பையன் தன் தாத்தாவுடன் வாழ்ந்து வந்தான். வேலைக்கு சென்றுவிடும் பெற்றோரை விட, அவன் தாத்தா தான் அவனுக்கு எல்லாமே. அவரிடம்தான் எல்லா சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வான்.அன்று விடுமுறை-தன் தாத்தாவுடன் ஏரிக்கரை ஓரமாகச் சென்று கொண்டிருந்தான். சிறிது தொலைவில் மெதுவாக நடந்து கொண்டிருந்த சிறிய ஆமை ஒன்று, அவன் கண்ணில் பட்டது. வேகமாகச் சென்ற அவன் அந்த ஆமையைக் கையில் எடுத்தான். <உடனே அந்த ஆமை தன் தலையையும், கால்களையும் ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது. ஆமை மீண்டும் தலையையும், கால்களையும் வெளியே நீட்ட வேண்டும், அதற்கு என்ன செய்வது என்று சிந்தித்தான். ஒரு குச்சியை எடுத்த அவன் ஆமை ஓட்டின் மேல் குத்தினான். எந்தப் பயனும் இல்லை. என்னென்னவோ செய்து பார்த்தான். ஆமை தலையையும், கால்களையும் வெளியே நீட்டவே இல்லை.இவற்றை பார்த்த அவன் தாத்தா, ''நீ எப்படி முயற்சி செய்தாலும் ஆமை தலையையும் கால்களையும் வெளியே நீட்டாது. அதை வீட்டிற்கு எடுத்து வா... தலையையும் கால்களையும் வெளியே நீட்டச் செய்கிறேன்,'' என்றார்.அவனும், தாத்தாவும் ஆமையை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றனர்.வீட்டிற்கு சென்றதும், ''நீ அந்த ஆமையை அடுப்பின் அருகே வை. அடுப்பின் சூடு அதற்கு இதமாக இருக்க வேண்டும்,'' என்றார் தாத்தா.அவனும் அப்படியே செய்தான்.சிறிது நேரத்தில் ஆமை தலையை வெளியே நீட்டியது. அதன் கால்களும் வெளியே வந்தன. மெல்ல நகர்ந்தது ஆமை.இதைப் பார்த்த நவநீதன் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தான்.''நீ எவ்வளவோ முயற்சி செய்தும் பயன் இல்லை. இப்பொழுது இந்த ஆமை நடக்கிறது. இதிலிருந்து என்ன புரிந்துக் கொண்டாய்?'' என்று கேட்டார் தாத்தா.''கட்டாயப் படுத்துவதால் யாரையும் செயல்பட வைக்க முடியாது. சிறிது அன்பு காட்டினால் போதும், அவரே விரும்பிச் செய்வார்,'' என்றான் நவநீதன்.'' சபாஷ்டா பேராண்டி!'' என்றார் தாத்தா.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !