ஊக்கமது கைவிடேல்!
குடும்பத்தில் ஆறு குழந்தைகளில் மூத்தவள் நான். சென்னை, பல்லாவரம், புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 11ம் வகுப்பில் நானே முயன்று சேர்ந்தேன். பெற்றோர் மளிகைக்கடை நடத்தி வந்தனர். தினமும் அதிகாலை எழுந்து, வீடு, கடைக்கு உரிய பணிகளை முடித்து, பள்ளி செல்வேன். மேல்நிலையில் கற்ற இரண்டு ஆண்டும் விடுப்பே எடுத்ததில்லை. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிந்து மதிப்பெண் சான்றிதழ் வாங்க சென்றிருந்தேன். உதவி தலைமை ஆசிரியை சரஸ்வதி, 'பெற்றோருடன் வந்தால் தான் தர முடியும்...' என கூறிவிட்டார். வீடு திரும்பி, தந்தையை அழைத்து சென்றேன். அவரிடம், 'வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்திருக்கிறாள். தரமான கல்லுாரியில் சேர சுலபமாக இடம் கிடைக்கும்... படிக்க வையுங்கள்; நல்ல நிலைக்கு வருவாள்...' என, திரும்ப திரும்ப வலியுறுத்தினார்.எனக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்த தந்தையின் மனம் மாறியது.கல்லுாரியில் சேர அனுமதித்தார். நானே முயன்று சேர்ந்தேன். பி.காம்., 2ம் ஆண்டு படித்த போது திருமணம் நடந்தது. கணவர் ஒத்துழைப்புடன் பட்டப்படிப்பை முடித்து, மத்திய அரசு பணியில் சேர்ந்து சிறப்பாக வாழ்கிறேன்.இப்போது என் வயது, 49; உயர் கல்வியை வலியுறுத்திய உதவி தலைமை ஆசிரியையை, தினமும் நன்றியுடன் போற்றி வணங்குகிறேன்.- மு.தனலட்சுமி, சென்னை.