உள்ளூர் செய்திகள்

ஏமாற்றாதே!

சிங்கமும், நரியும் குகையில், ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. பசி எடுக்கும் போது வெளியே வந்து, ஏதாவது ஒரு விலங்கை கொன்று தின்னும் சிங்கம். அதில், மீந்தவற்றை உண்டு வந்தது நரி. உழைக்காமலே உணவு கிடைத்ததால் ஆனந்தப்பட்டது. இருப்பினும், 'சிங்கத்தைப் போல் வாழ முடியவில்லையே' என்ற ஏக்கத்தில் தவித்தது.ஒரு நாள் -நண்பர்களை சந்திக்க, பக்கத்து காட்டிற்குச் சென்றது சிங்கம்; திரும்ப சில நாட்கள் ஆகும் என்பதால், குகையை கவனமாக பார்த்துக் கொள்ள நரியிடம் கூறியது. இந்த சந்தர்ப்பத்துக்காக, பல நாட்களாக காத்திருந்தது நரி. தீவிரமாக யோசித்து ஒரு தந்திரம் செய்தது. காட்டில் எல்லா விலங்குகளையும் சிங்கம் அழைப்பதாக அறிவித்தது. சிங்கத்தின் அழைப்பு என்பதால், விலங்குகள் தவறாமல் கூட்டத்துக்கு வந்தன. மேடையில் ஏறிய நரி, 'நண்பர்களே... குகையை விட்டு வெளியே வந்தால், பல விலங்குகளை சிங்கம் அடித்துக் கொல்ல நேரிடும். எனவே, ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அந்த முடிவை உங்களிடம் கூற அனுப்பியது...' என்றது.'என்ன முடிவாக இருக்கும்' என்று, விலங்குகள் ஆவலுடன் காத்திருந்தன. தொண்டையை கனைத்தபடி, 'காட்டில் சுற்றித் திரிந்து அப்பாவி விலங்குகளை வேட்டையாடுவதில்லை என முடிவு செய்துள்ளது சிங்கம். ஆனால், அதற்கு பசி எடுக்கும் அல்லவா... அப்போது, குகைக்குள் இருந்து கர்ஜிக்கும்; கர்ஜனையைக் கேட்டு தினமும் ஏதாவது ஒரு விலங்கு இரையாக வேண்டும்... உடனே குகைக்கு வந்து விட வேண்டும்...' என பவ்யமாக கூறியது நரி.விலங்குகள் ஒப்புக் கொண்டன.மறுநாள் -குகைக்குள் இருந்த நரி, சிங்கத்தைப் போல் கர்ஜனை செய்தது; தினமும், ஒரு விலங்கு குகைக்குள் வர, அடித்துச் சாப்பிட்டு, மகிழ்ச்சியாக பொழுதை கழித்தது. புத்திசாலித்தனமாக செயல்பட்டு, உழைக்காமலே உணவு தேடும் உத்தியை கண்டுபிடித்திருந்தது நரி; அதற்காக, தன்னைத்தானே பாராட்டியும் கொண்டது.நரியின் உடல் பருத்து கொழுத்தது. குகையில் இருந்து ஒருமுறை கூட சிங்கம் வராததை கவனித்த விலங்குகள், 'ஏதோ சூழ்ச்சி உள்ளது' என சந்தேகப்பட்டன. உண்மையை அறிய திட்டம் தீட்டின.அன்று, கொழுத்த மான் இரையாக வர, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது நரி; வயிறு முட்ட சாப்பிட்டு உறக்கம் போட்டது. விலங்குகள் எல்லாம் ஆலோசனை செய்தன.பெண் நரி ஒன்றை குகைக்கு வெளியே நிறுத்தி, ஊளையிட கூறின.திட்டப்படி ஊளையிட்டது பெண் நரி; குகைக்குள் உறக்கத்தில் இருந்த நரி, இனத்தின் குரலைக் கேட்டதும் சுறுசுறுப்படைந்தது. தன் நிலையை மறந்து, ஊளையிட்டவாறு வெளியே வந்தது; உண்மையை அறிந்த விலங்குகள் அதை அடித்துக் கொன்றன.தளிர்களே... உழைக்காமல் ஏமாற்றி வாழ்பவர்களின் முடிவு இப்படித்தான் அமையும்; உழைப்பும், நேர்மையும் இரு கண்களைப் போன்றவை; அவற்றை பேண வேண்டும்.வி.கற்பகவல்லி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !