சிரிப்பும், வேதனையும்!
புதுச்சேரி, முத்தரையர்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1975ல், 9ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியராக இருந்த சந்திரன், சரித்திரம் - பூகோளம் பாடங்களை நகைச்சுவையுடன் நடத்தி, மனதில் பதிய வைப்பார். அன்று பூகோள பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பின் வரிசையில் அமர்ந்திருந்த மாணவன் சிவா கையில் பிரம்பை கொடுத்து, கரும்பலகையில் மாட்டியிருந்த உலக வரைப்படத்தில், 'சீனா நாடு எங்கிருக்கிறது...' என, சுட்டிக் காட்ட சொன்னார்.முழித்தபடி, 'தெரியல சார்...' என்றான். அவனை தண்டிக்கும் விதமாக, 'பெஞ்ச் மேல் ஏறி நில்...' என்றார். தாமதிக்காமல் ஏறியவன், 'சார்... இப்ப கூட தெரியல...' என்றான்.மிக நிதானமாக, 'இமயமலை மறைத்து இருப்பதால் தான் தெரியவில்லையா...' என்றார் ஆசிரியர். அவரது நகைச்சுவையால் வகுப்பறையே குலுங்கி சிரித்தது. பின்னாளில், குடும்ப பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருவரும் இறந்ததை அறிந்து வேதனை அடைந்தேன்.தற்போது, என் வயது, 61; புதுச்சேரி நகராட்சியில், அலுவலக மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். சிரிக்கவும், சிந்திக்கவும் கற்றுத்தந்த அந்த ஆசிரியரை மறக்க முடியவில்லை.- ஆ.தேவதாஸ், புதுச்சேரி.தொடர்புக்கு: 74486 47587