உள்ளூர் செய்திகள்

மாய விழிகள்! (7)

முன்கதை: சிறுமி தியா, பாட்டி வீட்டருகே தோப்பு கிணற்றில் தண்ணீர் குடித்ததால் பார்வையில் ஒருவித சக்தி ஏற்பட்டது. அதே தண்ணீரை குடித்த அவள் தோழி அனுவும் வினோத சக்தி பெற்று மிரண்டாள். இனி -''சொல்லுக்கா எனக்கு பயமா இருக்கு. என் கண்ணுல ஏதாவது பிரச்னையா...''''இல்லை அனு. உன் கண்ணில் பிரச்னை இல்லை; எனக்கும் இதே மாதிரியான அனுபவம் இருக்கு...''''என்ன சொல்ற...''''நானும், ஏதாவது ஒரு பொருளை இதே மாதிரி உற்றுப் பார்த்தால், என் கண் முன், புகை மூட்டம் போல தோன்றும். பின், அந்த பொருள் பார்வைக்கு மங்கலாகும்; அது, மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாது...''''நிஜமாத் தான் சொல்றீயாக்கா...''''ஆமா அனு. இதை நான் புரிஞ்சிக்க சிறிது நாள் ஆச்சு. இதே தோப்பு கிணற்றில், தண்ணீர் குடித்த பின், எனக்கு இந்த மாதிரியான அனுபவம். அதே கிணற்றில், தண்ணீர் குடித்த உனக்கும், அந்த சக்தி வந்து இருக்குன்னு நினைக்குறேன்...''''அப்போ நான், ஏதாவது ஒரு பொருளை உற்றுப் பார்த்தால், அது மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுமா...''''அப்படித்தான் தோன்றுகிறது. நான், இந்த மாதிரி பொருளை உற்றுப் பார்த்து, மற்றவர்கள் கண்களுக்கு மறைய வைத்திருக்கிறேன்...''தியா கூறியதை கேட்டதும், வியப்புடன் பார்த்தாள் அனு.''நிஜமாவா, என்னக்கா சொல்ற...''''ஆமா அனு...''பூங்காவில் நடந்ததையும், அனு தண்டனை பெற்ற போது கேக்கை, வார்டன் கண்ணுக்கு மறைய வைத்ததையும் விளக்கினாள் தியா.''வார்டன் கண்ணுக்கு, கேக் தெரியாமல் போனதால் தான், அங்கிருந்து சென்றாரோ...''தலையை அசைத்து ஆமோதித்தாள் தியா.''இதை சோதித்து பார்க்கணும். இங்கே பாட்டி இருக்காங்க; அவங்கள வெச்சு கிட்டே சோதிச்சுடலாமா...''சாப்பாட்டு அறைக்கு வந்தனர் அனுவும், தியாவும். மேஜையில், தண்ணீர் சொம்பு இருந்தது.''அனு... நீ மேஜையில் இருக்குற சொம்பை உற்றுப் பாரு. அது, பாட்டி கண்ணுக்கு மறையுதான்னு பார்க்கலாம்...''''சரிக்கா...''''பாட்டி... இங்க சற்று வாங்களேன்...''அழைத்தாள் தியா. பாட்டி வரும் அரவம் கேட்க, அனுவை நோக்கி சைகை செய்தாள்.மேஜை மேல் இருந்த சொம்பை, அனு உற்றுப் பார்க்க, அவள் கண்களுக்கு முன் புகை மூட்டம் தெரிந்தது. மறுகணமே அந்த சொம்பு அவள் பார்வைக்கு மங்கலானது.'தம்ப்ஸ் அப்' காட்டினாள் அனு.இதற்குள், சமையல் அறையிலிருந்து வந்திருந்தார் பாட்டி.''என்னடா...''''மன்னிக்கணும் பாட்டி. குடிக்க தண்ணீர் வேணும்...''பாட்டியின் பார்வை மேஜை நோக்கி சென்றது.''மேஜையில், சொம்புல இருக்கே தண்ணீர். எடுத்து குடிக்க வேண்டியது தானே...''பாட்டி மேஜையை நெருங்கி செல்ல, திடுக்கிட்டனர் இருவரும்.கண்ணை சிமிட்டினாள் அனு. அவளுக்கு சொம்பு தெளிவாக தெரிந்தது. கேள்விக்குறி தொக்க பார்த்தாள் தியா.சொம்பை எடுத்து வந்து தியாவிடம் கொடுத்தார் பாட்டி.''இந்த வயசுல இவ்வளவு சோம்பல் கூடாது...''சிரித்தவாறே நகர்ந்தார் பாட்டி.'புகை மூட்டம், மங்கலான தோற்றம் போன்றவை தனக்கு ஏற்படும் போது, பிறர் கண்ணுக்கு மறையும் பொருள், அனு பார்க்கும் போது, மறையவில்லையே ஏன்'குழம்பினாள் தியா.''என்னக்கா, நீ ஏதோ சொல்ற, ஒன்னும் நடக்கலையே...''''அது தான் அனு, எனக்கும் புரியல... வா யோசிக்கலாம்...''வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்திற்கு வந்தனர்.''நான் இங்கே ஏதாவது ஒரு பொருளை உற்றுப் பார்க்கவாக்கா...''''பாரு... உன் கண்ணுக்கு முன் புகைபோல தோன்றி, அப்பொருள் மங்கலாக தெரிகிறதா என பார். எதனால் அது மற்றவர் கண்களுக்கு மறையவில்லை என பார்க்கலாம்...''வாடாமல்லி செடியை உற்றுப் பார்த்தாள் அனு.''லேசான புகை மூட்டம் போல தெரியுதுக்கா...''''ம்...''''அக்கா, இப்போ... அந்த வாடாமல்லி செடி மங்கலா தெரிகிறது...''ஆர்வமாய் சொன்னாள் அனு.தியா பார்த்த போது, துல்லியமாக தெரிந்தது.அப்போது தான், அதை கவனித்தாள் தியா.''ஹேய் அனு... கண்டுபிடிச்சுட்டேன். நீ உற்றுப் பார்த்தால், பொருள் மறையாது. ஆனால்...''தன்னை மறந்து கத்தியபடி, ஆர்வத்தால் அனுவை கட்டி அணைத்தாள் தியா.தியா கூறிய விஷயம், அனுவை ஆச்சரியத்திற்குள் தள்ளியது.''அக்கா... நீ என்ன சொல்ற...'' என கேட்டாள் அனு.''அந்த வாடாமல்லி செடி, என் கண்ணுக்கு தெரிகிறது. ஆனால், அது அசைவு இல்லாமல் இருக்கிறது. அதன் பக்கத்தில் இருக்கும் மற்ற செடிகள் அசைகின்றன...'' என்றாள் தியா.''அப்படின்னா...''''உனக்கு கிடைத்திருப்பது வேறு ஒரு சக்தி. நீ, ஒரு பொருளை உற்றுப் பார்த்தால், அது ஆடாமல், அசையாமல் அதே இடத்தில் இருக்கும் போல...''ஆர்வத்துடன் பேசியபடி இருந்த, அவர்களை சாப்பிட அழைத்தார் பாட்டி.''அந்த தோப்புக் கிணறு பற்றி சொல்லுங்களேன்...'' சாப்பிடும் போது, பாட்டியிடம் பேச்சை ஆரம்பித்தாள் தியா.முகத்தில் ஒரு கேள்விக்குறியுடன், தியாவை பார்த்தார் பாட்டி.''அங்கே சென்றீங்களா...''கோபம் கலந்த கனிவுடன் கேட்டார் பாட்டி.அனுவும், தியாவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பொய் சொல்ல மனமின்றி, 'இல்லை...' என தலையசைத்தாள் தியா.''அங்கு செல்ல கூடாது. அது மர்மமான இடம் என சொல்றாங்க...'' என்றார் பாட்டி.''மர்மமா... என்ன பாட்டி சொல்றீங்க...'' என்றாள் தியா.''பல நுாற்றாண்டுகளா, அந்த தோப்பு கிணறு இருக்கு. ஆங்கிலேயர் காலத்திற்கு முன், தோண்டப்பட்டதுன்னு சொல்றாங்க...'' என்று ஆரம்பித்தார் பாட்டி.''அவ்வளவு பழமையானதா...''ஆச்சரியத்துடன் கேட்டாள் அனு.''ஆமா... ஆங்கிலேயர் காலத்தில் தான், அதன் கைப்பிடி சுவர் கட்டினாங்களாம். அந்த இடத்துக்கு, யாரும் சொந்தம் கொண்டாடததாலும், அதை பராமரிக்காததாலும், நிறைய புதர் மண்டி, அந்த இடமே புழக்கத்தில் இல்லாம போச்சு...'' ''பாட்டி... அங்க யாருமே போறதில்லையா...'' என கேட்டாள் தியா.''அந்த தோப்பு கிணற்று ஏரியாவில், ஒரு பாட்டி இருக்கிறாங்க. அந்த பாட்டி யாரு, எங்கிருந்து வந்தாங்க, எப்போ வந்தாங்கன்னு தெரியல. ஆனா, அவங்க, 200 ஆண்டுகளுக்கும் மேல, அங்கேயே இருக்கிறதா, ஊர்ல பேசிக்குறாங்க...'' என்றார் பாட்டி.''என்னது, 200 ஆண்டு காலமா...'' ஆச்சரியத்துடன் கேட்டாள் தியா.- தொடரும்...- ஜே.டி.ஆர்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !