ஆவிகள் இல்லையடி பாப்பா! (2)
சென்றவாரம்: பெரிய ராஜா பற்றி, ராமுவின் அப்பா சொல்ல ஆரம்பித்தார். அப்போது, திடீர் என அவருக்கு பேச்சு வரவில்லை. அதனால், ராமுவும், தாயாரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இனி - அதிர்ச்சியில் இருந்து விடுவித்து கொண்ட ராமு, அம்மாவை தேற்றினான்; அப்பாவை கைத்தாங்கலாக அழைத்து சென்று, கட்டிலில் படுக்க வைத்தான்.''அம்மா... அழுது புலம்ப வேண்டாம்... எதிர் பாராத துன்பம் வரும் போது, தைரியமா சமாளிக்க வேண்டும் என்று வகுப்பு ஆசிரியர் கூறுவார். தைரியத்தோடு இருந்தால், மாரடைப்பு வந்தாலும், பாதிக்காது என்பார். அதனால் அழுது புலம்பி பயன் இல்லை...''இனி என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். அப்பாவுக்கு திடீரென்று இப்படி ஏற்பட்டு இருக்கிறது. அப்படி என்றால் ஒரு அமானுஷ்ய சக்தி, ஆவி ரூபத்தில் நம்மை ஆட்டிப்படைக்கிறது. நான் கண்டது உண்மை என்றால், பெரிய ராஜா ஐயாவின் ஆவிதான் அது. ''இது நாள் வரை இல்லாதபடி இன்று எனக்கு கனவு வந்ததற்கும், இப்படி எல்லாம் நடப்பதற்கும் என்ன காரணம் என்று அப்பாவிடம் கேட்க இருந்தபோது, அவருக்கு வாய் பேச முடியாமல் போய்விட்டது; பரவாயில்லை. ஆவி, பேய், பூதம் இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை; பெரிய ராஜா பற்றிய உண்மையை அறிந்து கொள்ளாமல் விடப்போவதுமில்லை...''உடனே அப்பாவுக்கு வைத்தியம் பார்க்கணும்; என் நண்பன் டேவிட்டின் தந்தை ஒரு டாக்டர். அவனிடம் போன் செய்து, விவரம் கூறி முடிவெடுக்கலாம்,'' என்றான், ராமு.மகனின் பேச்சிலும், மன உறுதியிலும் மகிழ்ச்சி அடைந்து, சம்மதம் தெரிவித்தாள் ராமுவின் தாய்.தொலைபேசி மூலம் டேவிட்டை, தொடர்பு கொண்டு, முழு விவரத்தையும் கூறினான். உடனே, தந்தையிடம் கூறி, அவரை அழைத்து வருவதாக உறுதி அளித்தான்.மருத்துவரை எதிர்பார்த்து வீட்டு, வாயிலில் காத்திருந்தான் ராமு. அப்போது தொலைபேசி ஒலித்தது. ஓடி சென்று எடுத்தான் ராமு. ''தம்பி, நீங்க தான் ராமுங்களா...''''ஆமாங்கய்யா... நீங்க யாரு பேசறீங்க...''''தம்பி, இங்க ஒரு காரு வேகமாக வந்துகிட்டு இருந்துச்சு... திடீர்னு பிரேக் பிடிக்காம புளிய மரத்துல மோதி நின்னுடுச்சு. அதுல ஒரு பெரியவரும், ஒரு பையனும் இருந்தாங்க. அவன் பேரு டேவிட்டுன்னு சொன்னான்; அவன் அப்பா ரொம்ப முடியாம இருந்ததால உடனே ஆம்புலன்ஸ் வெச்சு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கோம். ''அந்த தம்பிக்கும் காயம்; நினைவு இழக்கல. ராமு ராமுன்னு உன் நம்பரை கொடுத்தாரு... அது தான் உன்கிட்ட பேசினேன். இப்ப அந்த தம்பியையும், மருத்துவமனையில தான் சேர்த்திருக்கோம். பெரியவருக்கு தான் பலத்த அடி; நினைவு இல்லாம இருக்காரு. நீ, உடனே அரசு மருத்துவமனைக்கு வந்தா, அவர்களுக்கு உதவியா இருக்கும்,'' என்று அந்த பெரியவர் கூறி முடித்தார்.தாயிடம் விவரம் கூறாமல், நண்பன் வரச் சொன்னதாக கூறி, வெளியே சென்றான்.தீவிர சிகிச்சை பிரிவில், டேவிட்டின் தந்தை இருப்பது தெரிந்தது.பொது வார்டில் டேவிட் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து, அங்கு சென்றான். அவனுக்கு கையில் மட்டும் அடி; மற்றபடி பெரிய காயம் ஒன்றும் இல்லை. டேவிட்டின் தந்தைக்குத்தான் தலையில் பலத்த அடி; அதனால் அவருக்கு, 'ஸ்கேன்' செய்ய அழைத்து சென்றனர். ''டேவிட் ஏன் கண் கலங்குற... நம் ஆசிரியர் என்ன சொல்லியிருக்கார். வானமே இடிந்து விழுந்தாலும், நிதானம் இழக்காமல் உறுதியுடன் இருந்தால், எந்த ஒரு சிக்கலையும் தீர்க்க முடியும் என்று அடிக்கடி கூறுவார் இல்லையா... அதனால் தானே எப்பவும், 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... உச்சி மீது வான் இடிந்து வீழுகிற போதிலும், அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பதில்லையே...' என்று பாரதியாரின் வரிகளை கூறி ஊக்கப்படுத்துவார்.''அந்த உறுதியை இப்போது தான் அனுபவத்தில் பயன்படுத்த வேண்டும். கவலையை விடு, உன் தந்தை பூரண குணம் ஆகிடுவார்; நீயும் இன்றே, 'டிஸ்சார்ஜ்' ஆகிடுவாய்; அதற்குள் என் தந்தையை, வேறு டாக்டரிடம் காட்டி வைத்தியம் பார்த்து கொள்கிறேன்; அதற்காக கவலைப்பட வேண்டாம்...'' என்றான் ராமு.மெல்ல தலை அசைத்து அருகில் அழைத்தான், டேவிட்.''என்ன டேவிட், ஏதாச்சும் சொல்லணுமா...''''ஆமாம்...''''என்ன சொல்லு...''''உன் வீட்டு விஷயத்தை சொன்னதும், என் அப்பா சிரிச்சாரு... என்னப்பா ஆவி அது இதுன்னுகிட்டு. இந்த காலத்துல, அதெல்லாம் சினிமாவில் தான் வரும். நேர்ல எல்லாம் வராதுன்னு சொன்னாரு... சரி சரி என்னன்னு பார்ப்போம்னுதான் சொல்லி கிளம்பினாரு. ''நல்லா தான் கார் ஓட்டிக்கிட்டு வந்தாரு... ஆனா, ஒரு கட்டத்துல கார் திடீர்னு நின்னுடுச்சு... அப்பாவும், எவ்வளவோ முயன்று பார்த்தாரு... பின், காரு அதுவாவே ரொம்ப வேகமாக கிளம்பி ஒரு மரத்துல மோதிடுச்சு...''அப்பத்தான் நான் மரத்தை கவனிச்சேன்; அது ஒரு புளிய மரம்; ஒரு வெள்ளை நிற பட்டம் மாதிரி ஒண்ணு, அந்த மரத்துல இருந்து காத்துல பறந்து போச்சு. அந்த பட்டத்துல ஒரு பெரிய படம் இருந்துச்சு. அதற்கு மேல அப்பாவை கவனிக்க வேண்டியிருந்ததால, அத பார்க்க முடியல. அதற்குள், அப்பாவும் மயக்கம் போட்டுட்டாரு. அக்கம் பக்கத்துல இருந்தவங்க கார் மோதின சத்தம் கேட்டு ஓடி வந்தாங்க.''ஒரு பெரியவர் பேசினது காதுல கேட்டுச்சு. 'இந்த மரத்துல இப்படித்தான் அடிக்கடி விபத்து ஏற்படும்'ன்னு சொல்லிக்கிட்டே ஆம்புலன்சுக்கு போன் செஞ்சு, என் அப்பாவை ஏத்தி அனுப்பினாங்க.''நான் அரை மயக்கத்துல இருந்தேன். அப்பவும் நினைவோடு உன் நம்பரையும் கொடுத்து, பெயரையும் சொல்லி, விவரம் கூற சொன்னேன்,'' என்று கூறிய டேவிட்டின் உடல் மெல்ல நடுங்க ஆரம்பித்தது.''டேய் டேவிட், 'கூல் கூல்' அப்புறம் பேசலாம்; ரெஸ்ட் எடு,'' என்று சமாதானம் செய்தான், ராமு.அப்போது, ஒரு நர்ஸ் வந்து, டேவிட்டை பார்த்து, அவன் அருகில் இருந்த ராமுவிடம் விசாரித்தாள்.அவர்களிடம், தான் யார் என்ற விவரத்தை கூறினான். ''சரி தம்பி... இப்ப தீவிர சிகிச்சை பிரிவில இருந்த டாக்டர் ஜோசப் தனி வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அவர் ஏதோ பேசணும்ன்னு சொல்றார். அவருடைய மகன் இப்போது வர முடியாத காரணத்தால், நீ அவரிடம் பேசு,'' என்று அழைத்தாள்.''சிஸ்டர், டாக்டருக்கு ஆபத்து ஒன்றும் இல்லயே...'' என்று ராமு அச்சத்துடன் கேட்டான்.''இல்ல தம்பி... மொதல்ல ரத்தம் கட்டியிருக்குன்னு பயந்தோம். 'ஸ்கேன்'ல எதுவும் இல்ல; ஏதோ அடிபட்ட அதிர்ச்சி; வயசான காரணத்தால மயக்கமாயிருக்காரு; பெரிய அளவுல பாதிப்பு இல்ல; நீ போயி என்னன்னு கேளு,'' என்று அனுப்பி வைத்தாள்.நண்பன் டேவிட்டிடம் சொல்லிவிட்டு வேகமாக சென்றான் ராமு.''வாப்பா ராமு; 'சாரி'ப்பா... உன் அப்பாவுக்கு உதவி செய்ய வரப்போக, உன்னை தொந்தரவு செய்யற மாதிரி ஆயிடுச்சு. இப்ப நான் நல்லாவே இருக்கேன். கொஞ்சம் பலவீனம்; அவ்வளவு தான். அது சரி டேவிட் எப்படி இருக்கான்,'' என்றார்.''அங்கிள், அவன் நல்லா இருக்கான்; கவலையே வேண்டாம்,'' என்றான் ராமு.''நாம ஒண்ணு நினைச்சா, ஒண்ணு நடக்குது. சரி, இப்ப உன் அப்பா அதிர்ச்சியில் இருந்து மீண்டுட்டாரா... இல்ல இன்னும் பேச்சு வரலயா,'' என்று பாசத்தோடு கேட்டார். ''இல்ல டாக்டர்... அப்பா இன்னும் பேச வில்லை!''''சரி சரி, இதை அப்படியே விட கூடாது. என் நண்பரும், மூளை மற்றும் நரம்பியல் நிபுணருமான, டாக்டர் அப்பாசை, அவரது வீட்டில் சந்தித்து, முழு விவரமும் கூறி அழைத்து போ; நிச்சயம் உதவுவார். ''எங்களுக்காக நீ இங்கு இருக்க வேண்டாம்; நாங்கள் அநேகமாக, காலையில் டாக்டர் வந்ததும், டிஸ்சார்ஜ் ஆகிடுவோம். உடனே உன் தந்தைக்கு வைத்தியம் பார்க்க வேண்டும்,'' என்றவர் டாக்டர் அப்பாசின் விலாசத்தையும், போன் நம்பரையும் கொடுத்து, அனுப்பினார்.டேவிட்டிடம் விவரம் கூறி, விடை பெற்று, மருத்துவர் அப்பாசின் வீடு நோக்கி சென்றான், ராமு.- தொடரும்...