உள்ளூர் செய்திகள்

இன்ப அதிர்ச்சி!

திண்டிவனம், சிங்கனுார் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில், 1993ல், 3ம் வகுப்பு படித்த போது, ஆங்கிலப் பாடம் கற்பித்தார் ஆசிரியை தரணி. அன்றன்று நடத்தும் பாடத்தில் மறுநாள், டிக்டேஷன் வைப்பார். சரிவர கவனிக்காமல் டிக்டேஷனில், 'ஜீரோ' மதிப்பெண் வாங்குவேன். நாளடைவில் என்மீது தவறான அபிப்ராயம் ஏற்பட்டதால் புறக்கணித்தார்; பாடம் நடத்தும் போது என் முகம் பார்ப்பதை தவிர்த்தார். மனம் சோர்ந்த நிலையில் மற்ற மாணவர்களை கவனித்தேன். அவர்களைப் போல் கற்க முயற்சித்தேன். ஒரு வாரத்திற்குப் பின் நடந்த தேர்வு எழுதினேன். அதை திருத்தியபோது, 'பிரம்படி நிச்சயம்' என பயந்தபடி கைகளை விரித்தேன். இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.கன்னத்தை கிள்ளி முத்தமிட்டபடி, சத்துணவு அறையில் தக்காளி பழம் ஒன்றை எடுத்து வந்து பரிசாக கொடுத்து கைதட்டி உற்சாகப்படுத்தினார் ஆசிரியை. பத்துக்கு, எட்டு மதிப்பெண் வாங்கியுள்ளதாக மகிழ்ச்சி பொங்க கூறினார். எனக்கு, 36 வயதாகிறது; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அரசு பணியில் சேர போட்டித் தேர்வும் எழுதி வருகிறேன். அந்த ஆசிரியையை எண்ணும் போதெல்லாம் அவர் வழங்கிய பரிசே நினைவில் மலர்கிறது.- ரா.ராஜ்மோகன், திண்டிவனம்.தொடர்புக்கு: 85249 06220


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !