பொறுப்புணர்வு!
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம், டான்சம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2010ல், 10ம் வகுப்பு படித்தபோது, வேதியியல் செய்முறை கையேடு வாங்க திட்டமிட்டோம். அதற்காக, மாணவர்களிடம் தலா, 100 ரூபாய் வசூலிக்க கூறியிருந்தார் வேதியியல் ஆசிரியை பொன்னுதாய்.வசூலித்திருந்த 5 ஆயிரம் ரூபாய் வகுப்பு தலைவனிடம் இருந்தது. திடீர் என பணம் தொலைந்துவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. அதுகுறித்து விசாரணை நடத்தியும் எந்த பலனும் இல்லை.கண்டிப்புடன், 'தொலைந்த பணத்துக்கு, மாணவர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்...' என்று கூறி விட்டார் வகுப்பு ஆசிரியர். செய்வதறியாது திகைத்து நின்றோம். அந்த பொறுப்பை ஏற்று, அனைவருக்கும் கையேடு வாங்கி தந்தார் வேதியியல் ஆசிரியை. சம்பளத்தில் பெரும் பங்கை அதற்கு செலவிட்டார். என் மனதில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய, 'அக்னிச் சிறகுகள்' வாழ்க்கை வரலாற்று நுாலில், 'பின்னடைவு ஏற்படும் போது பொறுப்பேற்பதும், வெற்றி வரும் போது, குழுவுக்கு அர்ப்பணிப்பதும் தலைவரின் பண்பு' என குறிப்பிட்டு இருப்பார். அதை நிரூபிக்கும் வகையில் அமைந்தது ஆசிரியையின் செயல்.எனக்கு, 25 வயதாகிறது; பொறியியல் பட்டம் பெற்று மென்பொருள் நிறுவனத்தில் உயர் பொறுப்பு வகிக்கிறேன். அந்த பொறுப்பை நிறைவேற்றும் வாழிகாட்டியாக உதவுகிறது அந்த ஆசிரியையின் செயல். அவரிடம் கற்றதை பாக்கியமாக கருதுகிறேன்.- பாலாஜி சீதாராமன், விருதுநகர்.