உள்ளூர் செய்திகள்

நெல்லு சோறு!

திண்டுக்கல் மாவட்டம், சித்தரேவு கிராம பஞ்சாயத்து பள்ளியில், 1957ல், 3ம் வகுப்பு படித்த போது, பூமிதான இயக்க தலைவர் ஆச்சாரிய வினோபாஜி, கால்நடை பயணமாக, காந்தி கிராமம் வந்திருந்தார். அன்று எங்கள் பள்ளிக்கு வருவதாக நிகழ்ச்சி நிரல் இருந்தது. இதை அறிந்த வகுப்பாசிரியர் சுறுசுறுப்படைந்தார். வகுப்பில் இருந்த மாணவர்களுக்கு, சிறிதளவு கேசரி இனிப்பு வழங்கி, ஒழுங்காக அமர வைத்தார். மாலை, 4:30 மணிக்கு, விருந்தினரை மகிழ்வுடன் வரவேற்றோம். அவர் வழங்கிய அரிய அறிவுரைகளை பெற்றோம். மறுநாள், வகுப்பில் ஒருவன், 'சார்... நேற்று நான் கேசரி வாங்கவில்லை...' என்றான்.சிரித்தபடியே, 'நீ நேற்று பள்ளிக்கு வரவில்லையா...?' என்று கேட்டார் ஆசிரியர்.தயங்காமல், 'நேற்று எங்க வீட்டில் நெல்லுச்சோறு உணவாக கிடைத்தது. அதனால் தான் வரவில்லை...' என்றான். வகுப்பே சிரிப்பு மழையில் நனைந்தது. எனக்கு, 75 வயதாகிறது; எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்த பின், சொந்தமாக மளிகை கடை நடத்தி வந்தேன். தற்போது, பள்ளிப் பருவ நிகழ்வுகளை அசை போட்டு வாழ்கிறேன். அந்த காலத்தில், குடும்பங்களில், நெல்சோறு உணவாக கிடைப்பது மிக அரிதாகத்தான் இருந்தது! - எம்.செல்வம், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !