விஞ்ஞானி! (17)
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எப்படி இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதி பதவியை வெறுத்து ஒதுக்கினாரோ, அதேபோல, இந்தியாவில் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவை யில், நேருவே வற்புறுத்திய போதும் சேரமறுத்து விட்டார் ஓர் இந்திய விஞ்ஞானி.அந்த அதிசய மனிதர் வேறு யாருமல்லர்; இந்தியாவில் முதல் அணுசக்திக் கமிஷனின் தலைவரான ஹோமி ஜஹாங்கீர் பாபாதான்.பம்பாயைச் சேர்ந்த ஒரு பார்ஸி குடும்பத்தில் பிறந்த ஹோமி பாபா, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு மேற்படிப்புக்காகச் சென்று, இன்ஜினியர் பட்டத்தையும், பி.எச்டி., பட்டத்தையும் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பிரபல அணு விஞ்ஞானியான நீல்ஸ்போருடன் சேர்ந்து அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பின்னர் என்ரிகோபெர்மி, பாலி முதலிய அணு விஞ்ஞானிகளோடும் சேர்ந்து பணியாற்றினார்.1940ல் இந்தியாவுக்குத் திரும்பிய பாபா, டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி அதன் இயக்குனரானார்.பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நட்பும், தொடர்பும் பாபாவுக்கு இருந்ததால், இந்தியாவில் அணுஆராய்ச்சி நிலையங்களை அமைக்கவும், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கவும், தேவையான உதவிகளை எளிதாக பெறவும் பாபாவால் முடிந்தது.1948ம் ஆண்டில் சுதந்திர இந்தியாவின் முதன் அணுசக்திக் கமிஷன் நிறுவப்பட்ட போது அதன் முதல் தலைவராக ஹோமி ஜே.பாபா வைத்தான் நியமித்தார் பிரதமர் நேரு.1956ல் பம்பாய் டிராம்பே அணுசக்தி நிலையம் செயல்படத் தொடங்கியது. 1955ம் ஆண்டில் ஜெனீவா நகரில் ஐ.நா அணு சக்தி மாநாட்டுக்கு பாபாதான் தலைமை வகித்தார். ஆக்கப்பணிகளுக்கே அணுசக்தி என்ற கொள்கை முழக்கத்தை எழுப்பியவரும், அணு ஆயுதச் சோதனைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று முழங்கியவரும் பாபாதான்.இந்தக் கால கட்டத்தில் தான் பிரதமர் ஜவஹர்லால் நேரு பாபாவைத் தம்முடைய அமைச்சரவையில் சேரும்படி வற்புறுத்தி அழைத்தார்.தாம் ஒரு சுதந்திரமான விஞ்ஞானி என்றும், அமைச்சரவையில் சேர்ந்து அதன் கட்டுப்பாடுகளுக்கு உட்படத் தாம் விரும்பவில்லை என்றும் கூறி நேருவின் அன்பு அழைப்பை பணி வோடு மறுத்து விட்டார் பாபா.அதன் பின்னர்தான் நேரு அவரைப் பிரதமரின் விஞ்ஞான ஆலோசகராக நியமித்தார். நேருவுக்குப் பின்னர் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் ஆலோசக ராகவும் நீடித்த பாபா, 1966 ஜனவரி 24ம் தேதியன்று நிகழ்ந்த ஒரு விமான விபத்தில் சிக்கி மரணமடைந்தது வரை அந்தப் பதவியை வகித்து வந்தார்.***