இளஸ் மனஸ் (349)
இந்துமதி அம்மா, நான், 5ம் வகுப்பு மாணவன். என் அப்பாவை விவாகரத்து செய்து விட்டு, தன்னுடன் பணிபுரியும் வேறு ஒருவருடன், அம்மா வாழ போகிறாராம். எனக்கு, மனதெல்லாம் என்னவோ செய்தது. 'அம்மா, நானம்மா...' என்று அழுகையை அடக்கியபடி கேட்டேன். 'நீ, அப்பாவுடன் இரு' என்கிறார், அம்மா. 'எனக்கு யார் சாப்பாடு போடுவாங்க, யார் குளிக்க வைத்து, சீருடை அணிவித்து, பள்ளிக்கு அனுப்புவாங்க, யார் வீட்டுப்பாடம் சொல்லித் தருவாங்க...' என்றெல்லாம் கேட்டதற்கு, 'எல்லாம் உன் அப்பா செய்வார்' என்று கூறிவிட்டார், அம்மா. 'நானும் உன்னுடன் வந்து விடுகிறேன்' என்று குரல் கரகரத்து கேட்ட போது, 'அதெல்லாம் முடியாது. அவர் ஒத்துக் கொள்ள மாட்டார்' என்று, ஆணித்தரமாக கூறிவிட்டார். அம்மாவிடம் இருந்து இப்படி ஒரு பதில் கிடைத்ததிலிருந்து, நான் அழுதபடியே இருக்கிறேன். என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை; படிக்க முடியவில்லை; துாக்கம் வருவதில்லை. நான் ஒரே மகன் ஆனதால், இதைச் சொல்லி பகிரக் கூட யாருமில்லை. நான் என்ன செய்வது அம்மா... - இப்படிக்கு, முரளி. அன்பு மகனே முரளி, 'உலகில் கெட்ட பிள்ளைகள் இருக்கலாம்; ஆனால், கெட்ட தாய் இருக்கவே முடியாது' என்றார், ஆதிசங்கரர். 'கடவுள், எல்லா வீடுகளிலும் இருக்க முடியாது என்பதால் தான், தனக்கு பதிலாக தாயை வைத்திருக்கிறார்' என்றவர், சீரடி சாய்பாபா. அவர்கள் காலத்து அன்னையர், அப்படித்தான் இருந்தனர். என் பாட்டியின் தலைமுறை, என் தாயின் தலைமுறை, என் தலைமுறை வரை கூட, அன்னையர், அன்னையராகவே இருந்தனர்; இருக்கின்றனர். தாய் என்பதன் அர்த்தமே அன்பும், பாசமும் தான். துரதிருஷ்டவசமாக உன் தலைமுறையில், சில அன்னையர் இப்படி இருக்கின்றனர். ஆசையும், சுயநலமும் கொண்டவர்களாக, மாறுபட்டிருக்கின்றனர். பெற்ற குழந்தைகளையும் புறக்கணித்து, மாற்றானோடு செல்லத் தயாரானவராக இருக்கின்றனர். தான், தன் சுகமே பெரிதென்று மாறிப் போயிருக்கின்றனர்; அதற்காக எந்த விலையும் கொடுக்க தயாராக உள்ளனர். ஐந்தறிவு கொண்ட உயிர்களும் கூட, இடம்மாறும் போது தங்களின் குட்டிகளை வாயால் கவ்விச் சென்று பத்திரப்படுத்தும். பூனை, நாய் போன்றவை, தங்கள் குட்டிகளிடம் பாசமாக இருப்பதை கண்ணார காணலாம். கங்காரு, தன் மடியிலேயே குட்டியை சுமந்து திரியும். சிங்கம், புலி, யானை போன்ற பெரிய விலங்குகளும், குட்டிகளை விட்டு பிரியாமல் இருப்பதை, 'நேஷனல் ஜியாகிரபி' போன்ற 'டிவி' சேனலில் பார்க்கலாம். காக்கை, குருவி, கிளி, அணில் போன்றவை, தங்கள் குஞ்சுகளுக்கு இரையூட்டும் அழகே, அழகு. விலங்குகளும், பறவைகளும் கூட, தான் பெற்றவற்றை பிரியாத போது, ஆறறிவு பெற்ற மனித இனம், அதிலும் தாயினம், பிரிவது பெரும் வேதனை. ஆனாலும் மகனே, பெற்ற தாய் தன் மகனை மறந்தாலும், உற்ற துணையாய் இருக்கும் நமச்சிவாயம் உன்னை மறவாது; தான் படைத்த உயிரை பாதுகாக்க வேண்டியது, அவன் கடமை. 'பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்' என்கிறது, கந்த சஷ்டி கவசம். உன் தாயின் பிழையையும் பொறுப்பான்; உன்னையும் காப்பான் என்பதை நம்பு. உறுதியாக இரு. நல்ல வழி பிறக்கும். - இப்படிக்கு, இந்துமதி.