உள்ளூர் செய்திகள்

நன்றியும் பிரார்த்தனையும்!

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, சர் சிவசாமி ஐயர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 9ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...வகுப்பு ஆசிரியை ஸ்டெல்லா, கண்டிப்பும் கனிவும் மிக்கவர். ஒரு நாள் வகுப்புக்கு செல்லாவிட்டாலும் உரிய காரணம் கேட்பார். அரையாண்டுத் தேர்வு நடந்த போது, என் தாத்தா இறந்து விட்டார். அதன் காரணமாக, இரண்டு தேர்வுகளை எழுத முடியவில்லை. மீண்டும் சென்று விசாரித்தபோது, 'முறையான மருத்துவ சான்றிதழ் கொடுத்தால் தான், 10ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற முடியும்...' என, கண்டிப்புடன் கூறிவிட்டார் ஆசிரியை. அதை, எப்படி வாங்க வேண்டும் என தெரியவில்லை; அப்படியே விட்டு விட்டேன். இறுதி தேர்வு முடிந்தது. கோடை விடுமுறைக்குப் பின், பள்ளி சென்றேன்; 10ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றிருந்தேன். மருத்துவ சான்றிதழ் இல்லாமலே தேர்ச்சி பெற செய்திருந்தார் வகுப்பு ஆசிரியை என்பதை அறிந்து, நன்றி கூற காத்திருந்தேன். மாரடைப்பால் திடீர் என அவர் இறந்ததாக செய்தி வந்தது. மன அமைதி இழந்து தவித்தேன்; பிரார்த்தனை மூலம் என் நன்றியை சமர்ப்பித்தேன்.தற்போது என் வயது, 55; ஆடை தயாரிப்பு பணிகள் செய்கிறேன். திறமை, ஆர்வம் உள்ளவர்களுக்கு, அந்த ஆசிரியை நினைவாக தையல் பயிற்சி தருவதை சேவையாக செய்து வருகிறேன்.- கே.பிரேமா கருணாநிதி, சென்னை.தொடர்புக்கு: 73586 97317


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !