உள்ளூர் செய்திகள்

அந்த ஏழு நாட்கள்!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும், புன்னகையும், நிறைவும் இருந்து கொண்டே இருக்கும். இதனை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒருவர் இதில் ஏதோ சூட்சுமம் இருப்பதாக நினைத்தார்.ஒருநாள் ஞானியிடம் சென்று, ''தங்களால் மட்டும் எப்படி எந்நேரமும் சாந்தம், அமைதி, புன்னகை என்று இருக்க முடிகிறது சுவாமி?'' என்று கேட்டார்.இந்தக் கேள்வியைக் காதில் வாங்காதவர் போலக் காணப்பட்ட ஞானி திடீரென்று, ''உன் கையை நீட்டு,'' என்றார்.கேட்ட கேள்விக்குப் பதிலளிக்காமல், வேறு ஏதோ சொல்கிறாரே என்று நினைத்த அவர், வேறு வழியின்றி தனது கையை நீட்டினார்.அவரது உள்ளங்கையில் ரேகையைப் பார்த்த ஞானி, ''உனது ஆயுள் நெருங்கி விட்டது. இன்னும் சரியாக ஏழு நாட்கள் மட்டுமே நீ உயிரோடு இருப்பாய்,'' என்றார்.இதைக் கேட்டதும் அந்த மனிதர் மயங்கி விழாத குறைதான். காரணம், ஞானியின் கணிப்பு எதுவும் இதுவரை பொய்த்ததே கிடையாது என்பதாலும் அந்த மனிதரைக் கிலி அப்பிக் கொண்டது.மிகுந்த கவலையோடு வீட்டிற்கு வந்த அவர், தனது மனைவியிடம் ஞானி கூறியதைத் தெரிவித்தார். ஆக அவரது வீட்டில் உள்ளோர் அனைவருமே துயரம் அடைந்தனர்.சில மணி நேரங்களுக்குப் பிறகு ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்ட அவர், தான் இறந்து போவதற்கு முன்பாக செய்ய வேண்டிய அத்தனையையும் பாக்கி இல்லாமல் செய்து முடித்து விட வேண்டும் என்று தீர்மானித்தார்.அதேபோல அடுத்த ஏழு நாட்களுக்குள் தான் செய்ய வேண்டிய அத்தனையையும் முடித்தார். தனது இறப்புக்குப் பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் கவலைப்படாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்தையும் செய்து முடித்தார்.சரியாக ஏழாவது நாள் ஞானியை சந்திக்க வந்தார். ''சுவாமி நீங்கள் சொன்னதுபோல இன்று ஏழாவது நாள். நான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்துவிட்டேன். இப்போது என் சாவைச் சந்திக்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றார்.உடனே ஞானி, ''அப்படியா! இப்போது மனநிறைவோடு, பயமில்லாமல் சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கிறாய் அல்லவா! இதேபோன்ற மனோ நிலையில் தான் நான் தினமும் இருக்கிறேன். மரணம் இன்னும் சற்று நேரத்தில் வரும், எல்லாம் முடிந்து போகும் என்கிற உண்மையை உணர்ந்து கொண்டால், அதன்மூலம் கிடைக்கும் நிம்மதி அலாதி சுகமானது.அதுவே சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அமைதியைத் தருகிறது. நிறைவை அளிக்கிறது. அதாவது இப்போது நீ இருக்கும் அதே மனோநிலை தினமும் எனக்குக் கிடைக்கிறது. இதுதான் உண்மை. இதனை நீ புரிந்து கொள். உன் கைரேகையைப் பார்த்து நான் கணித்துச் சொன்னது பொய். இந்த உண்மையை உனக்குப் புரிய வைக்கவே அவ்வாறு சொன்னேன்,'' என்றார்.இதைக் கேட்ட அவருக்கு தெளிவு பிறந்தது. அவருக்கு நன்றி கூறிவிட்டு, மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !