ஆச்சரியமான ரகசியம்!
கோவில்களில் நடக்கும் விழாக்களில் முக்கியமானது, கும்பாபிஷேகம். மற்ற விழாக்களுக்கு நன்கொடை அளிப்பதை விட, கும்பாபிஷேகத்திற்கு வழங்குவது மிகப் பெரிய புண்ணியம். இது குறித்த ஆச்சரியமான ரகசியம் ஒன்றைக் கேளுங்கள்:ஒரு ஊரிலுள்ள கோவிலில் கும்பாபிஷேகம். கோவில் தர்மகர்த்தா நன்கொடை வசூலிக்க, ஒரு வீட்டிற்கு சென்றார்.அந்த வீட்டுக்காரர், பணம் படைத்தவர் தான். ஆனால், அன்றைய சூழ்நிலையில், தொழில் நஷ்டமாகி, பணமுடையில் இருந்தார். இருப்பினும், அவர் தன்னிடமிருந்த, 50 ரூபாயைக் கொடுத்து, 'இன்றைய சூழலில், என்னால் இவ்வளவு தான் தர இயலும்...' என்றார். தர்மகர்த்தாவும் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். அடுத்து, இன்னொரு பணக்காரர் வீட்டுக்கு சென்றார். தர்மகர்த்தாவை வரவேற்று, அமர வைத்தார், அவரது மனைவி. வீட்டுக்குள் இருந்த கணவரிடம், தர்மகர்த்தா வந்த விபரத்தை சொன்னார்.'அவரை உள்ளே ஏன் அழைத்தாய்... இதெல்லாம் தண்டச் செலவு. ஏதாவது காரணம் சொல்லி அவரை திருப்பி அனுப்பியிருக்க வேண்டியது தானே...' என்று கடிந்து கொண்டார்.வேறு வழியின்றி, கணவரை வற்புறுத்தி பெற்ற, 100 ரூபாயைக் கொடுத்து அனுப்பினார். நன்கொடையாளர்கள் குடும்பத்தினர் இறந்து போயினர். பாவ, புண்ணிய கணக்கை சிவன் முன் வாசித்தான், சித்திரகுப்தன். ஐம்பது ரூபாய் கொடுத்தவருக்கு அதிக புண்ணியம், 100 ரூபாய் கொடுத்தவருக்கு நிறைய பாவம் என, கணக்கில் இருந்தது.ஐம்பது ரூபாய் கொடுத்தாலும், உண்மை நிலையை சொன்னவர், முதல் பணக்காரர். 100 ரூபாய் கொடுத்தாலும், மனமின்றி திட்டிக் கொண்டே கொடுத்தவர், இரண்டாமவர். எனவே, முதல் பணக்காரருக்கு புண்ணியமும், அடுத்தவருக்கு பாவமும் பரிசாகத் தரப்பட்டது.சித்திரம் என்றால், ஆச்சரியம் என்ற பொருள் உண்டு. குப்த என்றால் ரகசியம். ஆம், சித்திரகுப்தர் கணக்கெழுதுவது ஆச்சரியமான ரகசியத்தை உள்ளடக்கியது. எதைச் செய்தாலும் மனமாரச் செய்தால் தான், பலன் உண்டு. இல்லாவிட்டால், பாவக்கணக்கு தான் ஏறும். உலக உயிர்களின் பாவ, புண்ணிய கணக்கை பார்ப்பவர், சிவன். ஆனாலும், இதைக் கண்காணிக்க ஒரு தெய்வத்தை நியமிக்க விரும்பினார். தன் மனைவி பார்வதியிடம் இதைச் சொல்ல, அவள் ஒரு சித்திரத்தை வரைந்து அதற்கு உயிரூட்டினாள். அந்த குழந்தையே சித்திரபுத்திரன். இவர், ரகசியமாக கணக்கெழுதுவதால், சித்திரகுப்தன் ஆனார்.இவருக்கு காஞ்சிபுரம் மற்றும் தேனி மாவட்டம், போடி அருகிலுள்ள கோடங்கிப்பட்டி ஆகிய ஊர்களில் கோவில்கள் உள்ளன. சில ஊர்களிலுள்ள சிவாலயங்களில், சித்திரகுப்தருக்கு சன்னிதிகள் உள்ளன.மத்திய பிரதேசம், சத்தர்பூர் மாவட்டம், கஜுராகோவிலுள்ள பழமையான கோவிலில் அழகிய சிற்பம் உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஜான்சி வரை ரயிலில் சென்று, 180 கிமீ., சாலை வழியில் கடந்தால், கஜுராகோவை அடையலாம்.தி. செல்லப்பா