உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

** எஸ்.குணசேகரன், காங்கேயம்: உங்கள் ஆலோசனையை படித்த பின், சிக்கனமாக இருக்கிறேன்; தாராள செலவை நிறுத்தி விட்டேன்! உடன் இருப்பவர்கள் என்னை, 'கஞ்சன்' என அழைக்க ஆரம்பித்து விட்டனரே...அழைத்தால் அழைத்து விட்டு போகட்டும்; அதனால், ஒரு ரூபாய் கூட நஷ்டமில்லை! வங்கியில் சேமிப்பும், பர்சில் பைசாவும் இல்லை எனில், இவர்கள் மதிக்கவும் மாட்டார்கள்; உதவவும் மாட்டார்கள்! கஞ்சனாகவே இருங்கள்!****சே.மணிகண்டன், பழவந்தாங்கல்: முறையான செக்ஸ் அறிவை உரிய பருவத்தில் தம் பிள்ளைகளுக்கு பெற்றோரே சொல்லிக் கொடுத்தால் என்ன?சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது தான் என் கட்சியும். ஆனால், பெற்றோரே இவ்விஷயம் பற்றி முறையாக தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்பதுதான் இங்கு சோகமான விஷயம்! பள்ளிக் கூடங்களில், 'செக்ஸ்' கல்வியை அறிமுகம் செய்தால், இளைய சமுதாயம் சரியான பாதையில் இட்டு செல்லப்படும் என்பது உறுதி!****கிரிஜா சுதன், பட்டாபிராம் : முன்பின் அறிமுகம் இல்லாத ஆணுடன், மணமான பெண்கள் பேனா நட்பு கொள்ளலாமா?சமீபத்தில் எனக்கு வந்த ஒரு கடிதம் படித்தேன். இதே போல, பேனா நட்பு கொண்டு மணமான பெண்ணுக்கு, 'வர்றியா?' என்ற ரீதியில் கடிதம் எழுதியுள்ளான், 'பேனா நட்பு' என்ற புனித பெயரில் புகுந்து கொண்ட கயவன் ஒருவன்! மனம் நொந்து, எனக்கு அக்கடிதத்தை அனுப்பி, ஆலோசனை கேட்டுள்ளார் வாசகி ஒருவர். இது போன்ற திமிங்கிலங்களும் இந்த புனித குளத்தில் உண்டு என்பதை மனதில் கொண்டு, இவர்கள் எழுதும் கடிதத்தால், எத்தகைய பாதிப்பும் ஏற்படாது என்ற பக்குவம் மனதில் இருந்தால், பேனா நட்பு கொள்ளலாம்.**** ஏ.பழனிசாமி, விருதுநகர்: 'நான் பணக்காரன், என்னால் எதையும் சாதிக்க முடியும்... முடியாதது என்பது என் அகராதியில் கிடையாது!' என்கிறானே என் நண்பன்...பணம் தரும் போதையால், மமதையால் வெளியான, 'ஸ்டேட்மென்ட்' இது! ஓடும் நாட் களையோ, உதிக்கும் சூரியனையோ பணத்தைக் கொண்டு, உங்கள் நண்பரால் நிறுத்தச் சொல்லிப் பாருங்களேன்... பல நூறு கோடிகளின் அதிபதிகளான அம்பானிகளாலும், பிர்லாக்களாலும் கூட முடியாது.**** கே.லட்சுமணன், கும்மிடிப்பூண்டி: படித்து பட்டம் பெற்றவர்கள் கையில் ஆட்சி இருந்தால், நாடு எப்படி இருக்கும்?இதோ, இன்று, இப்போது எப்படி இருக்கிறதோ, அதே லட்சணத்தில்தான் இருக்கும்! இப்போது, ஆட்சி பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களில், 90 சதவீதம் டபுள் டிகிரியும், அதற்கு மேல் சட்டமும் பயின்றவர்கள் தானே! படிக்காத ஒருவர், 50 வருடங்களுக்கு முன், ஆட்சியில் தலைமை பொறுப்பில் இங்கு இருந்தபோது, லஞ்ச, லாவண்யம் தலை விரித்து ஆடாமல், மக்களுக்காக ஆட்சி செய்ததாக பெரியவர்கள் கூற கேட்டுள்ளேன்.****சி.ரகுநாதன், போரூர்: யாரைக் கண்டால் உங்களுக்கு பயம்?என் நேரத்தை விரயம் செய்யும் ரம்பத்துடன் வருபவரைக் கண்டால். சில நேரங்களில் இவர்கள் தவிர்க்க இயலாதவர்களாகவும் இருந்து விடுகின்றனர்.***** வி.பாலாஜி, செங்கல்பட்டு: தனியாரிடம், 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் ஒரு வேலை, சர்வீஸ் கமிஷன் மூலம் அரசு துறையில் எழுத்தர் பணி, 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சுய தொழில் - இம்மூன்றும் ஒரு பட்டதாரி இளைஞனுக்கு, ஒரே நேரத்தில் கிடைக்கிறது... எதை ஏற்றுக் கொள்ள அவருக்கு சிபாரிசு செய்வீர்கள்?மூன்றாவதைத்தான்; முதலிரண்டில் பெறப் போகும் பொருளாதார ஆதாயத்தைக் காட்டிலும், மூன்றாவது பன்மடங்கு கிட்டும். மேலும், சுய தொழில் மூலம் கிடைக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் மற்றவற்றில் கிடைக்காது. ஆனால், நம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை செய்வதில் ஆர்வமே இல்லையே! இரண் டாவது, 'ஆப்ஷனை' தானே விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !